உலகம்

திலீபன் நினைவேந்தல் நிகழ்வு...சிங்கள மாணவர்களும் பங்கேற்பு!

Malaimurasu Seithigal TV

உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் பொறுப்பாளரான திலீபனின் நினைவேந்தல் இன்று   யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபி வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள - இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்பு

இதன் பொழுது யாழ் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களுடன் இஸ்லாமிய, சிங்கள மாணவர்களும் இம்முறை உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்ததோடு மேலும் யாழ் பல்கலை கல்விசாரா ஊழியர்கள்,யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ச்சியாக எதிர்வரும் 26ம் திகதி வரை மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கடைபிடிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்ததுடன், மாவீரர் பண்டிதரின் தாயாரினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோரால் திலீபனுக்கு அஞ்சலி

அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு மாவீரர்களின் பெற்றோரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்,.

போலீஸ் நிலையங்களை திறக்கக் கூடாது

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார். இதேவேளை முன்னதாக தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியில் மாவீரர் தமிழீழவனின் தாயாரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது