இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் குழந்தைப் பிறப்பை அதிகரிக்க வேண்டும் என அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றன. தென்னிந்தியாவில் பிறப்பு விகிதம் 1.5 ஆகக் குறைந்து முதியோர் மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், தமிழக அரசு 3வது குழந்தை பெறுவதற்கு ஒரு ஆண்டு விடுமுறை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆந்திர அரசு மக்கள்தொகைக் கொள்கையை மாற்றி 2, 3 குழந்தைகளை ஊக்குவிக்கிறது. 2ஆவது, 3ஆவது குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க ஊக்கம், 18 வயது வரை இலவசக் கல்வி, மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தெலுங்கானாவும் இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி எட்டு ஏழு என்ற வரலாற்றுச் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அங்கு குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க புதிய குடும்ப ஆதரவுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை கல்வி, சுகாதாரம் மற்றும் ரொக்கப் பரிசுகள் என மொத்தம் சுமார் இந்திய மதிப்பில் ரூ.46.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
மக்கள் தொகை குறைந்து முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நாட்டில் சுகாதார மற்றும் மருத்துவத்துக்கான தேவைகள் அதிகரிக்கும். இதனால் வரி அதிகரித்து இயல்பு வாழ்க்கை கடினமாகக் கூடும்.
பல வேலைகளுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இன்றைக்கு பிறக்கும் குழந்தைகள் தான் நாளைய பொருளாதாரத்தின் காவலர்கள். மறுபக்கம் மக்கள் தொகை பெருக்கமும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மக்கள் தொகை 100, 50 ஆண்கள் - 50 பெண்கள் எனக் கொண்டால், அவர்களுக்கு 0.8 என்ற பிறப்பு விகிதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 44. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 19.
பிறப்பு விகிதம் குறைந்தால் முதல் தலைமுறைக்கும் 3வது தலைமுறைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஏற்படும். இது பொருளாதாரத்தில் மட்டுமமல்லாமல் நாட்டில் இயக்கத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் மேஜிக்கல் எண் ஒன்று இருக்கிறது. அதுதான் 2.1 என்ற பிறப்பு விகிதம். பிறப்பு விகிதம் 2.1 என்பது மக்கள் தொகையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ செய்யாமல் அதே அளவில் சீராக தக்கவைக்கும் மாற்றுப் பிறப்பு விகிதம் (Replacement Level Fertility) ஆகும். அதாவது ஒரு பெண் தனது வாழ்நாளில் 2.1 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இதை நோக்கியே அரசுகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கின்றன.
ஆனாலும் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர். உலகம் முழுவதையும் கணக்கிடும் போது ஏற்கெனவே மனிதர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது. இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு காடுகளை அழிக்கும் அளவு மிகுதியான நிலம் தேவைப்படுகிறது.
இத்துடன் மின்சார தேவை, வாகன பயன்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொள்ளும்போது புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசும் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.