விளையாட்டு

India va Aus: இடையே 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...போட்டியை காண இருநாட்டு பிரதமர்களும் வருகை..!

Tamil Selvi Selvakumar

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியை காண வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். அவருடன் மந்திரிகள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியை காண அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்துக்கு பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியும் வந்தனர். அப்போது இருவருக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் தங்கள் நாட்டின் அணி கேப்டன்களுக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினர். பின்னர் வாகனம் மூலம் மைதானத்தில் ஊர்வலமாக வந்த பிரதமர்கள், அங்கு குழுமியிருந்த கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து கை அசைத்தனர்.

மைதானத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமருக்கு எடுத்து கூறினார். இருநாட்டு கிரிக்கெட் வீரர்களையும் பிரதமர்கள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.