சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் எம்.எஸ். தோனி, நிறுவனத்தின் 25% பங்குகளை வாங்க விரும்பியதாக ‘கிரிக் பிளாகர்’ என்ற தளத்தில் தகவல் வெளியானது.
தோனி மற்றும் அணி நிர்வாகம் இடையே நீண்ட பேரம் நடைபெற்றதாகவும், தோனி 18% பங்குகளை வாங்கிக்கொள்ள இறங்கிவந்ததாகவும், ஆனால் அணி நிர்வாகம் 5.5%-க்கு மேல் கொடுக்க முன்வரவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது.
45 வயதாகும் தோனி, கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 2027 சீசனில் அணியில் வீரராகத் தொடர்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும், CSK-வின் நம்பிக்கை நட்சத்திரமாக தோனி விளங்குகிறார். அவருக்கும் அணிக்குமான பிணைப்பு, ஒரு வீரருக்கும் நிறுவனத்துக்கும் உள்ள உறவைவிட உணர்வுப்பூர்வமானது. அதை வலிமைப்படுத்தவே தோனி அணியின் பங்குகளை வாங்க எண்ணியதாக அந்தச் செய்தி கூறியது.
தோனிக்கு குறிப்பிட்ட அளவு பங்குகளை அணி நிர்வாகம் விற்க முன்வரவில்லை என்றால், அவர் அணியில் இருந்து விலகுவாரா என்றுகூட சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இது சில நாட்களாகப் பேச்சுப்பொருளாக இருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்திய அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரரும் பிரபல கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா இதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அவரது யூடியூப் தளத்தில், "சமீபத்தில் ஆர்சிபி (RCB) அணி கைமாறியபோது அதன் மதிப்பு 1.7 முதல் 1.8 பில்லியன் டாலராகப் (சுமார் 17 ஆயிரம் கோடி) பேசப்பட்டது. அதேபோன்ற மதிப்பும் தகுதியும் கொண்டதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும். 5 முறை கோப்பை வென்ற பெருமை, வெளிநாட்டு லீகுகளில் தனித்தனி அணிகள் என சிஎஸ்கே ஒரு மிகப்பெரிய உலகளாவிய பிராண்ட்!
அப்படிப்பட்ட ஒரு அணியின் மதிப்பு 1.8 பில்லியன் டாலர் என்றால், அதில் 25 சதவீதப் பங்கு என்பது சுமார் 4000 கோடி! அவ்வளவு பெரிய தொகையை அல்லது பங்கை யாருமே யாருக்கும் சும்மா தூக்கிக் கொடுத்துவிட மாட்டார்கள். 25 சதவீதப் பங்கைப் பெற வேண்டுமானால், நாம்தான் முதலீடு செய்ய வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில்லாத, நியாயமற்ற ஒரு செய்தி" எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "அடுத்து 3.5 சதவீதம், 5.5 சதவீதம் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. 5.5 சதவீதப் பங்கு என்றாலும் கூட அது மிகப்பெரிய தொகையாகும்.
25 சதவீதம் கேட்டார்கள், அப்புறம் வேண்டாம் என்றார்கள், பிணக்கு ஏற்பட்டது, கடைசியில் 5.5 சதவீதத்தில் முடிந்தார்கள் என்பதெல்லாம் பார்க்கும்போது, யாரோ திட்டமிட்டுப் பரப்பிய வதந்தி என்றே எனக்குத் தோன்றுகிறது. அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லாததால் இதை என்னால் நேரடியாக 'போலிச் செய்தி' என்று சொல்ல முடியாது. ஆனால், நிச்சயமாக இது உண்மையான செய்தி அல்ல என்பதை அழுத்தமாகச் சொல்ல முடியும்" எனக் கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்