டிஆர் காங்கோ 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜூன் 17 அன்று உலகக்கோப்பையில் பங்கேற்றது. போர்சுகலை எதிகொண்ட இந்த அணி தனது திறமையான ஆட்டத்தால் ஆளுக்கு ஒரு புள்ளி என்று மேட்ச் ட்ராவில் முடிந்தது. ஆனால், தற்போது நாம் அந்த விளையாட்டினை பற்றி பார்க்கப்போவதில்லை. சுமார் 90 நிமிடங்கள் அசையாமல் கைகளை உயர்த்தியபடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒருவரை பற்றித்தான் பார்க்கவிருக்கிறோம்.
மைக்கேல் என்கூகா எம்போலடிங்கா என்ற இயற்பெயர் கொண்ட லுமும்பா வீயா, ஆட்டம் முழுவதும் தன் கையை உயர்த்தியபடி ஒரு சிலை போல அசையாமல் நிற்பார். கடந்த குளிர்காலத்தில் நடைபெற்ற சமீபத்திய ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் போது அவர் முதன்முதலில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அவர்கள் நாட்டின் பெருமையான பேட்ரிஸ் லுமும்பா போலவே தோற்றமளித்து நிற்பார். 1960-ல் பெல்ஜியத்திடமிருந்து நாட்டைச் சுதந்திரத்திற்கு வழிநடத்த உதவியவரும், ஓராண்டு கழித்துப் படுகொலை செய்யப்பட்டவருமான டி.ஆர். காங்கோவின் முதல் பிரதமர் பேட்ரிஸ் லுமும்பாவைப் போலவே ஆடையணிந்து அவரை நினைவு கூறும் வகையில் நிற்பார். லுமும்பா யார்? என்று நீங்கள் கேட்டால் அவர்தான் அந்த நாட்டின் கதாநாயகன்.
இவர் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்தார். லுமும்பா சோவியத் ஆதரவாளர் என்றும், கனிவளம் நிறைந்த இந்தப் பிராந்தியத்தில் கம்யூனிசக் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர அவர் வழிவகுப்பார் என்றும் மேற்கத்திய நாடுகள் நம்பின. அதனால் 1960-ல் பிரதமரான சில மாதங்களிலேயே, மேற்கத்திய நாடுகளால் தூண்டப்பட்ட ஒரு இராணுவப் புரட்சியின் மூலம் லுமும்பா பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அதன் பிறகு 1960 டிசம்பர் தொடக்கத்தில், பேட்ரிஸ் லுமும்பாவும் அவரது இரண்டு அமைச்சர்களும் பெல்ஜிய இரகசிய சேவைப் பிரிவினரால் கொல்லப்பட்டனர். அதாவது, காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் ஆகியவை சேர்ந்து அன்று லுமும்பாவை படுகொலை செய்தன.
இதில் வேடிக்கை என்னவென்றால் கொலையாளிகள் மீதோ அல்லது அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் மீதோ இதுவரை எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. ஆனால் லுமும்பாவின் குரல் இன்றும் ஆப்பிரிக்கா முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. இவரை ஆதிக்க சக்திகள் மக்களின் சிந்தனையில் இருந்து கூட அழிக்க நினைத்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற FIFA 2026 உலக கோப்பையில் ஓங்கி ஒலித்து நின்றார் லுமும்பா. மேலும், லுமும்பாவின் பாணியிலேயே நிற்கும் இவரை அனைவரும் 'லுமும்பா வாழ்கிறார்' என்றே அழைக்கின்றனர். டிஆர் காங்கோ வீரர்கள் தங்களது கலாச்சாரத்திற் பிரதிபலிக்கும் சிறுத்தை அச்சுகள், சீட்டா பதக்கங்கள் மற்றும் யானை எம்பிராய்டரி உள்ளிட்ட ஆப்பிரிக்க பாரம்பரியத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஆடைகளை அணிந்து வந்து அதற்கேற்ப விளையாட்டிலும் பிரதிபலித்தனர் என்று கூறினால் அது மிகையாகாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.