விளையாட்டு

எதிர்த்த உறவினர்களும் எனது வெற்றியால் பெருமை கொள்கின்றனர்..!

Malaimurasu Seithigal TV

மாணவி சாதனை

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டம், புத்தேரியை சேர்ந்த நீனா நீலங்கண்டன்(19), என்ற கல்லூரி மாணவி 50 கிலோ எடைபிரிவில் கலந்து கொண்டு அயர்லாந்து நாட்டு வீராங்கணையை வீழ்த்தி தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளார்.

நீனாவிற்கு இரண்டு பதக்கங்கள்

ஆசிய அளவில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டி கடந்த 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது, ஆசிய நாடுகளில் இருந்து 500 பேர் கலந்து கொண்டனர்.  இதில் இந்தியாவில் இருந்து 45 பேரும், தமிழ்நாட்டில் இருந்து 2 பேரும் கலந்து கொண்டனர்.

ஒருவர் இரண்டு முறை போட்டியிடலாம் என்ற விதியின் கீழ் நீனா தங்கப்பதக்கம், வெண்கல பதக்கமும், சரத் என்பவர் 79 கிலோ எடைபிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்தியா முழுவதும் கலந்து கொண்ட வீரர்களில் ஒரு தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 21 வெண்கல பதக்கம் வென்றனர்.

உற்சாக வரவேற்பு

தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கணை நீனாவிற்கு சென்னை விமான நிலையத்தில் அவர் பயிற்சி பெற்று வந்த ஒன் மேன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடமி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்து மரியாதை செய்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

ஆதரித்த பெற்றோர், எதிர்த்த உறவினர்

இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய குத்துச் சண்டை வீராங்கணை நீனா, 7ம் வகுப்பு படிக்கும் போது தற்காப்பு கலை ஒன்றை கற்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று மாவட்ட, மாநில அளவில் வென்று தற்போது ஆசிய அளவில் வென்றுள்ளது மகிழ்ச்சியை தருவதாக கூறினார். மேலும் அரசு பயிற்சி மேற்கொள்ள பயிற்சி மைதானம்( ஸ்டேடியம்) கட்டித் தர கோரிக்கை வைத்தார்.

உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பெற்றோர்கள் குத்துச் சண்டை போட்டிக்கு சம்மதித்த போதிலும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பெறும் வெற்றிகளால் உறவினர்களும் பெருமையடைகின்றனர் என்றார் நீனா.