விளையாட்டு

பிட்னஸ் குறித்து பகிரங்கமாக ஒப்புக்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி - வைரலாகும் பேட்டி!

உடல் தகுதி குறித்துப் பேசுகையில், நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் காயங்கள் இல்லாமல் இருப்பது மிக முக்கியம் என்பதை வைபவ் புரிந்து வைத்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

ஐபிஎல் 2026 தொடரில் 15 வயதிலேயே யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சாதனைகளைப் படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. விராட் கோலி, ஷுப்மன் கில் போன்ற அனுபவமிக்க வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்த சீசனின் அதிக ரன்கள் குவித்த வீரராக அவர் உருவெடுத்துள்ளார். அவரது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்தாலும், இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளை அவர் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. மேலும், இவ்வளவு நீண்ட பயணத்திற்குத் தேவையான உடல் தகுதியை (Fitness) அவர் கொண்டிருக்கிறாரா என்ற விவாதங்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழலில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசிய வைபவ், தனது மனநிலை குறித்துப் மனம் திறந்துள்ளார். தொடர்ச்சியான பேட்டிகள் மற்றும் வெற்றிகளுக்குப் பிறகு ஒருவித அழுத்தம் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்றும், களத்தின் சூழலுக்கு ஏற்பத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்வதே இந்த சீசனில் தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பந்து எங்கே வருகிறதோ, அதற்கேற்பத் துணிச்சலாக அடித்து ஆடுவதே தனது பாணி என்று கூறும் அவர், எதிர்காலத்தில் அழுத்தமான சூழல்களைக் கையாள்வதில் இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.

தன்னுடைய உடல் தகுதி குறித்துப் பேசுகையில், நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் காயங்கள் இல்லாமல் இருப்பது மிக முக்கியம் என்பதை வைபவ் புரிந்து வைத்துள்ளார். சஞ்சய் மஞ்ரேக்கர் மற்றும் முகமது கைஃப் போன்ற முன்னாள் வீரர்கள் எழுப்பிய பிட்னஸ் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, தான் ஏற்கனவே அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாக அவர் உறுதியளித்துள்ளார். கடினமான பயிற்சிகள் மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதில் தான் அதிகக் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருவதையும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அணியில் நிலவும் இந்தச் சிறந்த சூழல் தனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்