தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜே.என்.யூ. பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவாறு தயார் செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
கல்லூரி மாணவர்கள், விடுதிக்காக தனியாக கட்டணம் செலுத்தியபோதும், உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமற்றதாகவும், காலாவதியான பொருட்களை வைத்து சாப்பாடு தயார் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூன் மாத இறுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் கருப்பு வண்டுகள் தாக்கப்பட்ட மாவு, பூஞ்சை பிடித்த காய்கறிகள், எலிகளின் கழிவு கலக்கப்பட்ட பருப்பு போன்றவை சமையலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தும், இதுவரை விடுதி உணவகத்தில் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் உணவின் தரம் குறித்து வெளியிட்ட மாணவர்கள் மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
இந்நிலையில் அலுவலக உணவகத்தில் தயார் செய்யப்பட்ட சட்னியில் எலி ஒன்று தவறி விழுந்து வெளியேற முடியாமல் நீந்தும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெரும் சிரமத்துக்கு இடையே படித்து பட்டம் பெற வேண்டும் என நம்பி வந்த மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தால் மிரண்டு போயுள்ளனர்.