தனித்துவத்தை இழக்கிறதா சென்னை மாநகராட்சி...??

தனித்துவத்தை இழக்கிறதா சென்னை மாநகராட்சி...??
Published on
Updated on
2 min read

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சி சட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி தனது தனித்துவத்தையும் இழந்துள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் இருந்தாலும், பெருநகர சென்னை மாநகராட்சியானது தன்னாட்சி அதிகாரத்துடனும், தனித்துவத்துடனும் செயல்பட்டு வந்தது. சென்னை மாநகராட்சிக்கென தனியாக முனிசபல் சட்டம் 1919-ன்படி, மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. சென்னை மாநகராட்சியின் வரலாறு 300 ஆண்டுகளை கடந்தாலும், 1919-ம் ஆண்டு முதல் அதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வந்தது.

அதனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் சென்னை மாநகராட்சிக்கு பொருந்தாமல் இருந்தது. மேலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தவிர, மற்ற அதிகாரிகள், பணியாளர்கள் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். வளர்ச்சிப் பணிகளுக்கு உலக வங்கி உள்ளிட்ட பலவற்றில் கடன் பெறுவதும் இயல்பான ஒன்றாக இருந்தது. மேலும், மாநகராட்சி செயல்பாடுகளில் பெரிய அளவில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 (THE TAMIL NADU URBAN LOCAL BODIES RULES, 2023 ) என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பழமையான 'சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919' கடந்த ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.


இந்த புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் சென்னை மாநகராட்சிக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய விதிகள்படி சென்னை மாநகராட்சியின் தனித்துவம் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நகர்ப்புற நிர்வாகத்தின் கீழ் சென்னை மாநகராட்சி கொண்டுவரப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "இந்தப் புதிய விதிகள்படி, சென்னை மாநகராட்சி தனித்துவம் இழந்துள்ளது. தன்னாட்சி அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த சென்னை மாநகராட்சி விதிப்படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைக்க தடைவுள்ளது. ஆனால், புதிய விதிப்படி அவை வைத்துக்கொள்ளலாம்.

பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் அரசின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டும். அதேபோல், பல்வேறு விதிகளும் ஏற்கெனவே இருந்த விதிகளுக்கு முரண்பாடு உள்ளது. எனவே, புதிய விதிகளில் சில திருத்தங்களை சென்னை மாநகராட்சிக்கு மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் பரிந்துரை செய்தோம். அவற்றை அரசு ஏற்க மறுத்துவிட்டது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாறு கொண்ட, சென்னை மாநகராட்சியின் தனித்துவம், இந்தப் புதிய விதியால் பறிபோயுள்ளது" என்றனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்த புதிய விதிகளுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com