4 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த 65 வயது முதியவர்! மாநிலத்தையே அதிர வைத்த கொடூர சம்பவம்.. சிக்கியது எப்படி?

சிறுமி காணாமல் போனதும், அவளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவளைத் தேடத் தொடங்கியுள்ளனர்
4 year old girl Sexual assaulted
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக 65 வயது முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி காணாமல் போனதும், அவளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவளைத் தேடத் தொடங்கியுள்ளனர். ​​அப்போது சிதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ​​அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின்  சிசிடிவி காட்சியில், குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையுடன் இருப்பது பதிவாகியுள்ளது. இது, அவரை அடையாளம் காண முடியாமல் தடுமாறிய புலனாய்வாளர்களுக்கு உதவியது என அதிகாரிகள் தெரிவித்தனர். "குற்றம் சாட்டப்பட்டவர், உணவு தருவதாக ஆசை காட்டி குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். கால்நடைப் பட்டியில் இருந்த ஒரு கொட்டகைக்கு கொண்டு சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமி கொலை செய்ததாகக்" கூறப்படுகிறது. இதையடுத்து கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து வெள்ளிக்கிழமையன்று அந்த முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும்  நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சனிக்கிழமையன்றும் காவல் சாவடிக்கு விரைந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். பின்னர், அந்த மக்கள் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் போராட்டங்கள் தொடர்ந்தன; உள்ளூர் மக்கள் பேரணியாக திரண்டு நீதி கோரினர். புனே ஊரக காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை விரைவுபடுத்தப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தார். 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, இக்குற்றத்தை “மனிதாபிமானமற்ற” செயல் என்றும், இது “மனிதநேயத்தை களங்கப்படுத்தி உள்ளது” என்றும் கண்டித்துள்ளார். "நஸ்ராபூரில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்து புனே ஊரகக் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியதாகவும் தெரிவித்தார். இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்த மிருகத்தின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிய அதேவேளையில், பொதுமக்கள் அமைதி காக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுலே வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் முடிந்தவரை வலுவான சட்ட நடவடிக்கையை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக மகாராஷ்டிரா அமைச்சர் யோகேஷ் கடம் தெரிவித்தார். "விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது, அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் முயற்சி," என்று காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்

சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஷைனா NC, சமூகத்தின் நிலை குறித்து கவலைகளை எழுப்பி, கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். "நமது சமூகம் என்ன நிலைக்கு வந்துவிட்டது? நான்கு வயது சிறுமி ஒருத்தியை ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த 65 வயது முதியவர். இது எவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் காவல் சாவடிக்கு விரைந்துள்ளனர். காவல்துறையினர் இது குறித்துக் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், இந்த சமூகத்தின் மீது பெரிய கேள்வி உள்ளது. அது நமக்கு என்னவாக இருக்கிறது என்பது?

மேலும் விரைவு நீதிமன்றங்களில் ஏற்படும் தொடர்ச்சியான தாமதங்கள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளதாக ஒரு சமூக ஆர்வலர் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com