16 வயது சிறுவனை மயக்கிய 30 வயது இளம்பெண்...

சென்னையில் 16 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளியூர் தப்பியோட முயன்ற 30 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வயதை மீறி காதல் உண்டாக காரணம் என்ன? இளம்பெண்ணின் நோக்கம் என்ன?
16 வயது சிறுவனை மயக்கிய 30 வயது இளம்பெண்...
Published on
Updated on
2 min read

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் துணிக்கடையில் விற்பனை உதவியாளராக வேலை பார்த்து வருகிறான். அதே கடையில் வனதேவி என்கிற 30 வயது இளம்பெண்ணும் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் தன்னைவிட 14 வயது குறைவான சிறுவனின் மீது வனதேவிக்கு காதல் ஏடாகூடமாக வளர்ந்தது. சிறுவன் கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுத்து தன் வசப்படுத்திய வனதேவி காதலை வெளிப்படுத்தினார்.

சிறுவனுக்கும், வனதேவியின் மீது காதல் அதிகமானதைத் தொடர்ந்து மகுடிக்கு மயங்கும் பாம்பாய் காதலியின் பேச்சுக்களை தட்டாமல் செய்து வந்தான். இந்நிலையில் வனதேவியின் முறைகெட்ட காதல் விவகாரம் வீட்டாருக்கு தெரியவரவே, அவரது பெற்றோர் உடனடியாக திருமண ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினர்.

அதேபோல் சிறுவனின் பெற்றோரும் வனதேவியை அழைத்து எச்சரித்தனர். ஆனால் அந்த சிறுவனோ, வனதேவி தனக்கு உடன் பிறவா அக்கா போல எனக் கூறி சமாளித்தார். இதையடுத்து சிறுவனின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்ததில் வனதேவியும், சிறுவனும் உயிருக்கு உயிராக காதலித்தது தெரியவந்தது.

இந்நிலையில் வனதேவி, இருவீட்டாரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு குட்டிக் காதலனுடன் வெளியூருக்கு தப்பியோட முயற்சி செய்தார். அதன்படி ஜூலை 15-ம் தேதியன்று அதிகாலை 4.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய வனதேவி, சிறுவனை அழைத்துக் கொண்டு வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றார்.

அங்கு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்ததைத் தொடர்ந்து சென்னையில் இருந்தால் பிரித்து விடுவார்கள் என எண்ணி, சிறுவனுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைந்தார்.

தொலைவான ஊருக்கு கிளம்பும் பேருந்தில் ஏறி விட வேண்டியதுதான் என காத்திருந்தது இந்த ஜோடி. ஆனால் புறநகர் பேருந்து வருவதற்குள், போலீஸ் வாகனம் அதி விரைவாக வந்து அங்கு நின்றது.

கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார், சிறுவனை திருமணம் செய்த வனதேவியை கைது செய்தனர். பின்னர் சிறுவன் அவரது பெற்றோருடன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து வனதேவி மணப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

சிறுவனின் தாய் தரப்பில் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றபோதும், மைனர் சிறுவனை திருமணம் செய்த காரணத்தால் வனதேவி கைது செய்யப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com