

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டான்டில் கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்திருக்கிறார்.
இவர் கடந்த ஓராண்டாக காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அது குறித்து அவரது மனைவி சுமயா மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் “எனது கணவரை காணவில்லை” என புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஓராண்டாக தேடி வந்த நிலையில் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில் “எனது அண்ணனை காணவில்லை, எனது அண்ணியுடன் நீ தவறான முறையில் தொடர்பு வைத்துள்ளாய் இதனால்தான் என் அண்ணன் அலாவுதீன் காணாமல் போய்விட்டார். உன்னை தீர்த்து கட்டாமல் விட மாட்டேன்” என அலாவுதீன் தம்பி ஹாரீஸ், ஹக்கீம் என்ற நபரை கத்தியால் குத்திக்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதால், ஹாரீஸ் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், ஹக்கீமையும் போலீஸ் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். ஆனால் அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“அலாவுதீன் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டும் போது ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்தது, அதனை விசாரித்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளதாக” ஹக்கீம் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு ஆளும் கட்சி கவுன்சிலர் அவரது மகன்களுடன் சேர்ந்து அலாவதீனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அலாவுதீன் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டும் போது அங்கு செல்போன் கடை வைத்து நடத்தி வந்த காரமடை நகராட்சி திமுக 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் சரண்குமார் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்துவந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த கள்ளத்தொடர்பு சரண்குமாருக்கு தெரியவந்தது இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இவரது மனைவி கோபித்து கொண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அலாவுதீனை தீர்த்து கட்ட நினைத்து நைசாக பேசி அவரை வரவழைத்த திமுக கவுன்சிலர் ரவிக்குமார் தனது மகன்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை எடுத்து சென்று மாதேஸ்வரன் மலை கோவில் பின்புறம் உள்ள புதர் குப்பைகளை கொட்டும் இடத்தில் வைத்து தீயிட்டு எரித்துவிட்டு எதுவும் நடக்காதது போல இருந்துள்ளனர். மேலும் கர்நாடகாவில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்து சரண்குமார் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது காரமடை திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கைது செய்யப்பட்ட மணிகண்டன் திமுக இளைஞரணி பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளத்தொடர்பு காரணமாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.