தூக்கத்தில் போன் போட்டு தர மறுத்த தங்கை...ஆத்திரத்தில் அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற அக்கா...!

தூக்கத்தில் போன் போட்டு தர மறுத்த தங்கை...ஆத்திரத்தில் அரிவாள்மனையால் வெட்டிக்கொன்ற அக்கா...!

தன் மகனுடன் பேசுவதற்கு செல்போன் தராததால் உடன்பிறந்த தங்கச்சியை அக்காவே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரின் கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். அதே சமயம் தமிழ்செல்வியின் உடன் பிறந்த அக்கா வெங்கடேஷ்வரி என்பவர் திருமணமாகி கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு  நாகமணிகண்டன் என்ற மகன் உள்ளார். அவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு தாயார் பழனியம்மாள் வீட்டில் அவருடன் இணைந்து மூத்தமகள் வெங்கடேஷ்வரி மற்றும் இளையமகள் தமிழ்செல்வி ஆகியோர் தனியாக தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்த அக்கா வெங்கடேஷ்வரி, தூங்கிக்கொண்டிருந்த தங்கச்சி தமிழ்செல்வியை தட்டி எழுப்பி எனது மகன் நாகமணிகண்டனிடம் பேசவேண்டும் செல்போனில் போன் செய்து கொடு என்று கூறியுள்ளார். அதற்கு தூக்க கலக்கத்தில் இருந்த தமிழ்செல்வி காலையில் போன் செய்துகொள்ளலாம் என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ்வரி வீட்டில் வைத்திருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த தமிழ்செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வி ரத்தவெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரே  வீட்டுக்கு வெளியே வந்து  என் தங்கயை நான் கொன்றுவிட்டேன் என்று சத்தம் போட்டு கத்தியுள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தமிழ்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேஷ்வரியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், உடன் பிறந்த தங்கையை அக்காவே அரிவாள்மனையால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com