கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி தெற்கு களம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி 40 வயதுடைய சிவரஞ்சனி. சுரேஷ் திருச்சியில் உள்ள தனியார் பழக்கடையில் விறபனையாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 23 வயதில் விகாஷ் என்ற மகன் உள்ள நிலையில் அவர் படித்து முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் சிவரஞ்சனி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
வழக்கமாக வீட்டில் தனியாக இருக்கும் சிவரஞ்சனி காலையிலே எழுந்து அன்றைய அன்றாட வேலைகளை செய்து விடுவார் என சொல்லப்படுகிறது. ஆனால் நேற்று காலை வெகுநேரமாக சிவரஞ்சனி வெளியே வராமல் வீடு திறக்காமல் இருந்திருக்கிறார். இதனை பார்த்து சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் அவரை காணவில்லை. உடனே மற்ற உறவினர்களுக்கு கால் செய்து அவர் வீட்டில் இல்லாமல் போனது குறித்து தெரிவித்துள்ளனர்.
பின்னர் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிவரஞ்சினியை வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் தேடி பார்த்த போது, அருகில் இருந்த கரும்பு காட்டில் மர்மமான முறையில் உடலில் ஆடைகளின்றி கை, கால்கள் கட்டப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். நாடா கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டும், கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தப்பட்டும் அவர் கொலை செய்யப்பட்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஸ்பி மற்றும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் குறிஞ்சி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் குறிஞ்சி சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் கொள்ளையடிக்க படவில்லை எனவே இது நகைக்காக நடைபெற்ற கொலை இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.