மத்திய பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், 30 வயதான திருமணமான பெண் ஒருவர், தன்னுடன் சேர்ந்து வாழும் கணவனின் தந்தை, உறவினர்கள் மற்றும் கிராமவாசிகளால் தாக்கப்பட்டதாகவும், பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த பெண்ணின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, முகம் கறுப்பாக்கப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டு, காலணிகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டு அவர் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரம் கடந்த புதன்கிழமை அன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்ணின் புகாரின் அடிப்படையில், அந்த நபரின் தந்தை உட்பட 11 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு பெண்ணை மானபங்கத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் அவர் மீது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல், ஒரு பெண்ணின் ஆடையைக் களைய குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையின் தகவல்படி, அந்தப் பெண் 12-14 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், சுமார் மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை விட்டுப் பிரிந்து, மற்றொரு கிராமத்து இளைஞருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர், அவர் அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, அந்த இளைஞர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் சமீபத்தில் விடுதலையான பிறகு, அந்த பெண் மீண்டும் அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாகவே செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. பாலியல் வன்புணர்வு வழக்கிற்குப் பிறகு அந்தப் பெண் மீண்டும் அந்த நபருடன் சேர்ந்து வாழ முடிவு செய்ததால், அவரது உறவினர்கள் கோபமடைந்ததாகவும், அதன் விளைவாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கிராமப்புற உதவி காவல் கண்காணிப்பாளர் கரந்தீப் சிங் சம்பவங்களின் வரிசையை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறை பணியாற்றி வருவதாகவும் காவல் நிலைய பொறுப்பாளர் ஆனந்த் பாபோர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.