“அப்பா தொட்டது எனக்கு புடிக்கல” - பெற்ற மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தந்தை.. தாயின் புகாரால் வெளிவந்த உண்மை!

தனது தந்தை தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்ததாக சிறுமி...
Chennai POCSO Case Ambattur Father Arrested
Chennai POCSO Case Ambattur Father Arrested
Published on
Updated on
1 min read

சென்னை செங்குன்றம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், தனது கணவர் மீது கடந்த (ஆக 29) ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், கருத்து வேறுபாடு காரணமாக தானும் தனது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு 9 வயதில் மகள் இருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். எனவே அவ்வப்போது மகளை பார்க்க வரும் கணவர் அவரை வெளியில் அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் அவருடன் வைத்துக் கொண்டு மீண்டும் வீட்டில் விடுவது வழக்கம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த கணவர், கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றதாகவும், வழக்கம் போல மறுநாள் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பிய சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால், சந்தேகமடைந்த தாய் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, “அப்பா தொட்டது எனக்கு புடிக்கல” என கூறி தனது தந்தை தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்ததாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் 36 வயதுடைய சிறுமியின் தந்தையை போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில், சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். 9 வயது சிறுமியிடம் அவரது தந்தையே பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரும், அதன்பேரில் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com