

கோவை மாவட்டம், தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கவி சரவணகுமார். இவரது மனைவி 46 வயதுடைய மகேஸ்வரி. இவர்களது வீட்டில் 15 வருடங்களாக கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ். கடந்த (அக் 28) ஆம் தேதி மகேஸ்வரியை சுரேஷ் கொலை செய்து விட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனை அடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சுரேஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்த பொழுது கவி சரவணன் அவரது மனைவி மகேஸ்வரி விவாகரத்து தர மறுத்ததால் கொன்று விடுமாறும் மேலும் வழக்கு செலவையும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேம்பரை தருவதாக ஆசை வார்த்தை கூறியதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார். சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தடாகம் காவல்துறையினர் கவி சரவணக்குமாரையும் கைது செய்து இந்த வழக்கில் இரண்டாவது கொலை குற்றவாளியாக சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கவி சரவணகுமாரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கல் சூளை வைத்து நடத்தி வந்த நிலையில் அதை காரணமாக வைத்து அடிக்கடி வெளியில் சென்று வந்திருக்கிறார். அப்போது சரவணகுமார் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு பெண்ணுடன் பக்கத்துக்கு ஊரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இது குறித்து அறிந்த மகேஸ்வரி தனது கணவனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் அவ்வப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடைபெற்று வந்த நிலையில் கவி சரவணகுமார் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் மகேஸ்வரி விவாகரத்து தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. எனவே சரவணகுமார் அவரது வீட்டில் வேலை செய்த ஓட்டுநர் சுரேஷிடம் சொல்லி தனது மனைவியை கொலை செய்ய கூறியுள்ளார். மேலும் சுரேஷை கொலையில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை துண்டித்து வைத்தது விசாரணையில் தெரியவந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.