"ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு" - கரண்டியை காய்த்து சூடு வைத்த சித்தி… 11 வயது சிறுமிக்கு நடந்த கொடுமைகள்!

சிறுமியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது குழந்தை மீது நடைபெற்று வந்த கொடுமைகள் தெரியவந்ததாக கூறப்படுகிறது...
kayalvizhi and police station
kayalvizhi and police station
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு முதலில் குமுதா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து மணிகண்டன், அதே பகுதியை கயல்விழி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு, முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அந்த குழந்தையை கயல்விழி தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

சிறுமிக்கு சூடாக்கிய கரண்டியால் உடலில் சூடு வைத்தது, சுடுநீரை ஊற்றியது, அடித்து சித்திரவதை செய்தது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், "ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு" என்று கூறி குழந்தையை மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கயல்விழி குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் போதும் குழந்தை அலறி துடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிலர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது குழந்தை மீது நடைபெற்று வந்த கொடுமைகள் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கயல்விழியிடம் அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, "இது எங்கள் குடும்ப பிரச்சினை. நான் அடிப்பேன், திட்டுவேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன். உங்களுக்கு என்ன? உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள்" என்று அலட்சியமாக பதிலளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர், “Childline 1098”-க்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டதுடன், மொடக்குறிச்சி காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணை நடத்தினார். பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றம் என்பதால், இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி அளித்த வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சித்தி கயல்விழி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com