

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள குரேர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 6 வயதில் இரண்டு மகள்களும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பாண்டுரங் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு அரசியலால் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நாண்டெட் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விருப்பமனு அளிப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்த பாண்டுரங் தற்போது அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ராமச்சந்திர ஷிண்டே என்பவரிடம் யோசனை கேட்டிருக்கிறார்.
பின்னர் மூன்று குழந்தையில் ஒரு குழந்தையின் பிரபு சான்றிதழில் தந்தையின் பெயரை மாற்ற முடிவு செய்து முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்ற முடியாததால் இரண்டு பெண் குழந்தையில் ஒரு குழந்தையை மறைத்து வைக்க நினைத்துள்ளனர். பின்னர் குழந்தை மீண்டும் வந்து விட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என நினைத்து குழந்தையை கொல்ல திட்டம் தீட்டி இருக்கிறார். எனவே பாண்டுரங் தனது இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையான பிராச்சி என்ற பெண்ணை அழைத்து கொண்டு குரேர் கிராமத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
அதனை தொடர்ந்து அங்கிருந்த கால்வாய் ஒன்றில் சிறுமியை தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றிருக்கிறார். பின்னர் உயிரிழந்த குழந்தையின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஒரு தனிநபர் அளித்த தகவலின் படி பாண்டுரங்கை ஆதாரத்துடன் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேர்தலுக்காக பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்