

தனது வீட்டில் இணையம் வழங்கும் பணியில் உதவி செய்து கொண்டிருந்த நபர் ஒருவர், பெண்ணுடைய தொலைபேசியை வாங்கி அதிலிருந்த அவருடைய அந்தரங்க வீடியோவை தனக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையின் தகவலின் படி, 37 வயதான லோகன் எட்வர்ட் கிரே-மெக்கானன், GFiber (கூகுள் ஃபைபர்) நிறுவனத்தில் 'ITC சர்வீஸ் குரூப் அக்விசிஷன்' ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சம்பவத்தினை அடுத்து கலிபோர்னியாவின் ஹெமெட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த செப்டம்பர் 11, வெள்ளிக்கிழமை அன்று காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 9 அன்று ஜி-ஃபைபர் வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கிரே-மெக்கானன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் புகாரில், அவர் தனது காதலனுக்கு அனுப்பிய அந்தரங்க காணொளி ஒன்று, ஐமெசேஜ் வழியாக மற்றொருவருக்கும் அனுப்பப்பட்டதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து லோகன் எட்வர்ட் கிரே-மெக்கானன் கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நபர் மீது வணிகக் கொள்ளை, ஒரு நபரின் தனிப்பட்ட பாலியல் படத்தை அவரது அனுமதியின்றிப் பகிர்தல் மற்றும் அனுமதியின்றி கணினியை சோதனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளனர்.
வாடிக்கையாளரான அந்த பெண், காணொளி பகிரப்பட்ட அந்த எண்ணை சோதித்தபோது அது, இணைய சேவை வழங்குவதற்காக வந்த கிரே-மெக்கானனுக்குச் சொந்தமானது என்பதை அவர் கண்டறிந்துள்ளார். வாடிக்கையாளரின் செல்போனை “வைஃபை” சிக்னலைச் சோதிக்க வேண்டும் எனக் கூறி கிரே-மெக்கானன் கேட்டுள்ளார். மேலும், “அவர் தனது தொலைபேசியில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை தன்னால் பார்க்க முடியவில்லை” என அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து விளக்கிய போலீசார், கிரே-மெக்கானன் எல்லா அறைகளிலும் தொலைபேசி இணையம் வேலை செய்கிறதா? என்பதைச் சரிபார்ப்பதற்காக வீட்டிற்கு பின்னால் செல்வது, வீட்டின் மாடிக்கு செல்வது போன்ற தந்திரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவருக்கு அந்த பெண்ணின் தொலைபேசியை முழுவதுமாக சோதனை செய்ய அவகாசம் கிடைத்துள்ளது. மேலும், அந்த பெண்ணின் தொலைபேசியில் அவரது காதலருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை படித்து பார்த்து விட்டு அவரது அந்தரங்க காணொளியை தனது எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய போலீசார், இந்த வழக்கினை ஒரு எச்சரிக்கையாக மக்கள் பார்க்கவேண்டும் என்றும் உங்கள் கைபேசியை மற்றவர்கள் பார்க்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு சந்தேகம்படும்படி யாரேனும் உங்களுடைய கைபேசியை கேட்டால் உடனடியாக சுதாரித்து காவல்துறைக்கு அழையுங்கள் என்று போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூறியுள்ளனர்.
மேலும் லோகன் எட்வர்ட் கிரே-மெக்கானனால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்திகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். லோகன் எட்வர்ட் கிரே-மெக்கானனுடன் இதேபோன்ற அனுபவம் யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால் காவல்துறையை உடனடியாக அணுகக் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்