சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரை சேர்ந்த ஜமீலா என்ற இளம் பெண்ணின் உறவினரான நூர் முகமதுவின் நகை காணாமல் போன விவகாரத்தில் நகையின் உரிமையாளர்கள் ஜமீலா மீது சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகரன் ஜமீலாவிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது, “மீண்டும் விசாரணைக்கு வருவேன்” என கூறியிருந்த உதவி ஆய்வாளர், நேற்று நூர் முகமது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு இல்லாத நிலையில் அவரது பெரியம்மா வீட்டிற்கு சென்றிருப்பதை அறிந்து தனசேகரன் அங்கு விசாரிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஜமீலாவின் பெரியம்மா, பெரியப்பா, குழந்தைகள் உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, “ஜமீலாவிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டும்” என கூறியதாக சொல்லப்படுகிறது.
அதன்பின், “நான் க்ரைம் எஸ்.ஐ., உண்மையை சொல்ல வேண்டும்” எனக் கூறி ஜமீலாவின் கையைப் பிடித்து, “உன் கை வேர்க்கவில்லை… நீ பதட்டமாக இல்லை” என பேசியதுடன், “உன் உதடு உண்மையை பேசவில்லை” என கூறி உதட்டைத் தொட்டு அநாகரீகமாக நடந்து கொண்டதாக பெண் புகாரியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜமீலா அணிந்திருந்த குர்கா உடையுடன் புகைப்படம் எடுத்ததுடன், “குர்காவை கழற்ற வேண்டும்” எனக் கூறி மீண்டும் புகைப்படம் எடுத்ததாகவும், “இந்த புகைப்படம் என்னிடம் மட்டுமே இருக்கும்” என மிரட்டியதாகவும் தெரிகிறது.
பின்னர் உண்மையைப் பேச வேண்டும் நெஞ்சில் கை வைத்து பேச வேண்டும் என்று கையைப் பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும் அதனை ஜமீலா தவிர்த்தபோது அவருக்கு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜமீலா கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்து உதவி ஆய்வாளர் தனசேகரன் தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.