சாதாரண சண்டையில் நடந்த வெறிச்செயல்! வயிற்றைக் கிழித்து, விரல்களையும் வெட்டிய கொடூரம்! கான்பூரில் மாணவனுக்கு நடந்த விபரீதம்!

இந்த நான்கு பேரும் சேர்ந்து மாணவன் அபிஜீத்தைச் சரமாரியாகத் தலையில் தாக்கினர்...
Kanpur law stdent attack news in tamil
Kanpur law stdent attack news in tamil
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில், சாதாரண மருந்து விலையை முன்னிட்டு ஏற்பட்ட வாக்குவாதம், இருபத்திரண்டு வயது சட்டக்கல்லூரி மாணவனின் வயிற்றைக் கிழித்து, கையின் விரல்களை வெட்டி எடுத்த பயங்கரமான தாக்குதலில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் கான்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டுச் சட்டம் படித்து வரும் அபிஜீத் சிங் சந்தேல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மருந்துக்கடை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட மருந்தின் விலை தொடர்பாக, மருந்துக்கடை ஊழியர் அமர் சிங் என்பவருக்கும், மாணவன் அபிஜீத்துக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை அடுத்தடுத்துக் கைகலப்பாக மாறியது. இதில் அமர் சிங்குடன் அவரது சகோதரர் விஜய் சிங் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேர் சேர்ந்து அபிஜீத்தை சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர்.

இந்த நான்கு பேரும் சேர்ந்து மாணவன் அபிஜீத்தைச் சரமாரியாகத் தலையில் தாக்கினர். தாக்குதலின் வேகத்தில் அபிஜீத் கீழே சரிந்து விழுந்தார். தலையில் இருந்து இரத்தம் கொட்ட, வலியால் அவர் துடித்துக்கொண்டிருந்தபோது, இந்தக் கும்பல் அதை நிறுத்தவில்லை. மேலும் கொடூரமாக நடந்து கொண்ட அந்தக் கும்பல், கூர்மையான பொருள் ஒன்றைக் கொண்டு மாணவனின் வயிற்றைக் கிழித்துத் தாக்கியது என்று காவல்துறை கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் மிகவும் பயங்கரமான முறையில் இருந்ததாகத் தெரிகிறது.

வயிற்றில் பலத்தக் காயமடைந்த போதும், உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் அபிஜீத், இரத்த வெள்ளத்துடன் அங்கிருந்து தனது வீட்டை நோக்கி அலறிக்கொண்டு ஓடினார். ஆனால், அந்த நால்வரும் அவரைக் குறிவைத்துத் துரத்திச் சென்றனர். சிறிது தூரத்தில் ஓடிய அவரைக் மீண்டும் பிடித்துக் கொண்ட அந்தக் கும்பல், அவரது கைகளில் ஒன்றின் இரண்டு விரல்களை வெட்டி எறிந்துள்ளனர். மாணவனின் கூக்குரலைக் கேட்ட அருகில் இருந்த மக்கள் ஓடி வந்து அவரைக் காப்பாற்ற முயன்றபோது, இந்தக் கொடூரக் குற்றவாளிகள் நால்வரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

இந்தத் தாக்குதலில் மாணவன் அபிஜீத் சந்தேலுக்குத் தலையில் மட்டும் பதினான்கு தையல்கள் போடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான தீவிரமான தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சாதாரண விலை விவகாரத்தில், ஒரு சட்டக்கல்லூரி மாணவன் மீது கொலைவெறியுடன் இதுபோன்ற கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கான்பூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com