தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ஷாபாத் மண்டலத்தில் உள்ள தைவாலகுடா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த மே 16-ஆம் தேதி தனது தாயுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த ராஜ்குமார் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து, தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த குடும்பத்தினை பழிவாங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று அதிகாலை சிறுமியின் வீட்டிற்குச் சென்ற அவர், முதலில் சிறுமியின் பாட்டி மற்றும் தாயை கொலை செய்துவிட்டு, பின்னர் 17 வயது சிறுமியை அருகில் உள்ள வயல்வெளிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவரைக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ராஜ்குமார் தனது வீட்டிற்குச் சென்று மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை மேலும் விரிவாக படிக்க : "நான் ஆறு பேரைக் கொலை செய்துவிட்டேன்” - அடுத்தடுத்து நடந்த அரிவாள் வெட்டு.. ஜாமீனில் வந்து பழிவாங்கிய போக்சோ குற்றவாளி!
கொலைகளை செய்துவிட்டு தனது பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆறு பேரைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆறு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். 17 வயது சிறுமி அளித்த புகாரால் சிறைக்கு சென்ற போக்சோ குற்றவாளி ஜாமினில் வந்து ஆறு பேரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.