உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய புகைப்படக் கலைஞர் ஆலோக் குப்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து வந்த ஆலோக், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திடீரென காணாமல் போன நிலையில், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆலோக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் வீசப்பட்டிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவியில் சிக்கிய முக்கிய தடயம்
ஆலோக் மாயமானது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் போலீஸாருக்கு முக்கியத் தடயமாக அமைந்தன. அதில் 3 பேர் ஆலோக் தங்கியிருந்த வீட்டில் இருந்த பெரிய நீல நிறப் பையுடன் செல்வது பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், ரேவா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்ட தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து இரு சம்பவங்களையும் இணைத்து விசாரணை நடத்தியதில், ஆலோக்கின் நண்பர்களான சுபம் திவாரி, சுபம் யாதவ் மற்றும் அங்குஷ் யாதவ் ஆகியோருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது.
கடன் பணத்திற்காக கொலை?
போலீஸ் விசாரணையின்படி, ஆலோக்கிற்கும் சுபம் திவாரிக்கும் இடையே பணம் தொடர்பாக ஏற்கெனவே தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடனாக வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் ஆலோக்கை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன் படி கடந்த (ஆக -11) ஆம் தேதி வீட்டில் இருந்த ஆலோக்கை அடித்து கொலை செய்து பின்னர் 16 மணி நேரதிற்கு பின் அவரது உடலை பெரிய நீல நிற பையில் போட்டு வீட்டில் இருந்து வெளியில் எடுத்து சென்றிருகின்றனர்.
சுமார் ஐந்து மணி நேரமாக ஆலோக்கின் உடலை பெரிய நீல நிறப் பையில் வைத்து காரில் எடுத்துச் சென்று ரேவா மாவட்டத்தில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலையாளிகள் அவரது விலை உயர்ந்த புகைப்படக் கருவிகள் மற்றும் ஐபோனையும் எடுத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கொலைக்குப் பிறகும் காதலிக்கு மெசேஜ்
இந்த வழக்கில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆலோக் கொலை செய்யப்பட்ட பிறகும், அவர் உயிருடன் இருப்பது போல காண்பிக்க அவரது ஐபோன் மூலம் சுபாஷ் திவாரி ஆலோக்கின் காதலிக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 20 நாட்கள் வரை ஆலோக் உயிருடன் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அனைவரிடமும் மெசேஜ் செய்து வந்திருக்கிறார். ஆனால், ஆலோக்குடன் காணொலி அழைப்பு அல்லது குரல் அழைப்பில் பேசுவதற்கு காதலி முயன்றபோது, அந்த அழைப்புகள் ஏற்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்