புதுச்சேரி, ஊசுடு தொகுதிக்குட்பட்ட வாழப்பட்டாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி 53 வயதுடைய அமுதா. இவர்களுக்கு திருமணமான இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அமுதா புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த (ஏப் 10) ஆம் தேதி அன்று வில்லியனூர் ஜி என் பாளையம் பகுதியில் உள்ள தனது மூத்த மகன் வீட்டிற்கு சென்ற அமுதா, மறுநாள் அங்கிருந்து அரசூரில் உள்ள தனது இளைய மகன் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பணிக்கு ஹோட்டலுக்கு சென்று, மீண்டும் காலை மூத்த மகன் வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் (ஏப் 12) ஆம் தேதி மதியம் வரை அமுதா வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது மூத்த மகன் வடிவேல் தாயார் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் வடிவேலு தனது தம்பிக்கு கால் செய்து தாயார் குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் (ஏப் 11) ஆம் தேதி இரவு 7:00 மணிக்கே தாயை பேருந்தில் ஏற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட வடிவேலு தனது தாய் பணிபுரியும் உணவகம் மற்றும் உறவினர்கள் வீட்டில் அவரை தேடி பார்த்துள்ளார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால், வடிவேலு வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அமுதாவின் செல்போன் எண்ணை டிராக் செய்த போது அவர் கடைசியாக ஒரு புது எண்ணிற்கு பேசி உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த எண் குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது தர்மபுரி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பரந்தாமன் என்பவர் புதிதாக வாங்கி உள்ள செல்போன் எண் என்று தெரியவந்தது. இதனை அடுத்து வில்லியனூர் போலீசார் பரந்தாமனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமுதா பரந்தாமனிடம் கட்டிட கூலி வேலை செய்யும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாற்றியுள்ளது. அப்போது பரந்தாமன் அமுதாவிற்கு ரூபாய் 3. 5 லட்சம் கடன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் அமுதா கட்டிட பணியை விட்டுவிட்டு ஹோட்டலில் பணிக்கு சேர்ந்த காரணத்தால் பரந்தாமனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து உள்ளார். இதில் சோகம் அடைந்த பரந்தாமன் தன்னுடன் பேசும் படி அமுதாவை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் பேச மறுத்து விட்டதால், தான் கொடுத்த ரூ. 3.5 லட்சம் பணத்தை பரந்தாமன் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு தனது மகன்களை வைத்து தகராறு செய்து விடுவேன் என அமுதா மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பரந்தாமன், கடந்த (ஏப் 11) ஆம் தேதி இரவு அமுதாவிடம் செல்போஃனில் தொடர்பு கொண்டு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என கூறி நேரில் அழைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து பரந்தாமன், அமுதா பணிபுரியும் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்து ஆசை வார்த்தை கூறி அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு விழுப்புரம் மாவட்டம் பூத்துரை கிராமத்தில் உள்ள முந்திரி தோப்புக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்து இருக்கின்றனர். பின்னர் தனது பணத்தை கேட்டு தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கயிற்றால், அமுதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் உடலை மறைக்க நினைத்து தனது நண்பர் விஜயை அழைத்து அதே பகுதியில் குழி தோண்டி புதைத்து விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் பரந்தாமன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பரந்தாமன் மற்றும் அவரது நண்பர் விஜய்யை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கள்ளகாதல் விவகாரத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.