கடலூர் மாவட்டம், சாத்திப்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது, 2-ம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அனுப்பாமல் காக்க வைத்த ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த 24 வயதுடைய அகஸ்டின் என்பவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்.
அவரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் பள்ளிக்கு விரைந்து சென்றுள்ளார். தகவல் அறிந்த கிராம மக்களும் பள்ளியில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் அகஸ்டினிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த சிலர் ஆசிரியரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் புகாரின் அடிப்படையில் அகஸ்டின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பான தகவல் பள்ளியில் பரவியதை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்த பெற்றோர் பலர் பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரும், அதனைத் தொடர்ந்து பள்ளியில் ஏற்பட்ட பரபரப்பும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.