

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டிலேயே வயலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ஜெகதீசனை அழைத்து வந்துள்ள போலீசார், அவரை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் தற்கொலைக்கு முயன்ற மாணவி சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றபட்டார். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளி மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலை முயற்சிக்குத் தள்ளிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அந்த மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்