“7 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை” - கழிவறைக்கு சென்ற இடத்தில் அத்துமீறிய வாட்ச்மேன்!

சிறுமியை ஏமாற்றி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல்..
Sexual assault
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பைதோனி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிடங்கு வாட்ச்மேன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு அருகே உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்துவதற்காக தனியாக சென்றுள்ளார். அப்போது அவர், குற்றம் சாட்டப்பட்ட நபர் பணிபுரியும் கிடங்கை கடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லாததை கவனித்த வாட்ச்மேன், சிறுமியை ஏமாற்றி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தாய் பதற்றமடைந்து தேடத் தொடங்கினார். அதே நேரத்தில், கிடங்கு அருகே சந்தேகத்திற்கிடமான சூழலை கவனித்த இரண்டு பெண்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி மன உளைச்சலுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சிறுமி மீட்கப்பட்டு உடனடியாக மும்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியதும், ஆத்திரமடைந்த பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்ட வாட்ச்மேனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஏராளமானோர் பைதோனி காவல் நிலையம் முன்பு திரண்டு, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், சிலர் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை மதியம் தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ததாக மண்டலம்-2 துணை காவல் ஆணையர் விஜயகாந்த் சாகர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com