பெண் காவலருக்கு பாலியல் சீண்டல்! ‘அண்ணா’ என்று நம்பி வந்த நபரின் வெறிச்செயல்..

அதிர்ச்சியடைந்த அவரை கத்தி கூச்சல் போட்டுள்ளார்.
hosur sexual harassment case
Published on
Updated on
2 min read

ஓசூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 36 வயதான இவர் தனது இரு குழந்தைகல் மற்றும் பார்வை இழந்த அவரது தாயாருடன் வசித்து வருகிறார். இரண்டாம் நிலை காவலராக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பணிபுரிந்து வந்த மகேஸ்வரியின் கணவர் வைகுண்டராமன் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் கருணை அடிப்படையில் அவரது மனைவி மகேஸ்வரிக்கு காவல் துறையில் கணினியில் டேட்டா என்டரி ஆபரேட்டராக வாரிசு வேலை கிடைத்துள்ளது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த மகேஸ்வரி,  அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலையத்தில் பணிபுரிந்து உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் தான் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு அவர் ஓசூரில் பணியாற்றி வருகிறார். 

தினந்தோறும் மகேஸ்வரி காவல் நிலையத்தில் பணிகளை முடித்து விட்டு ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் தனது கிராமத்திற்கு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த 16 ஆம் தேதி மாலை பணி முடிந்து மகேஸ்வரி ஒரு தனியார் பேருந்தில் தனது கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அவர் தனது வீட்டிற்கு சுமார் 2 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். பேருந்திலிருந்து இறங்கிய மகேஸ்வரி தனியாக  நடந்து சென்ற போது, அதே கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (37) என்பவர் தனது டெம்போ டிராவல்லர் வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி மகேஸ்வரி வாகனத்தில் ஏற்றி உள்ளார். அப்போது தனது கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மூர்த்தியுடன் நம்பிக்கையுடன் வாகனத்தில் ஏறி சென்றுள்ளார் மகேஸ்வரி.

சிறிது தூரம் சென்ற மூர்த்தி டெம்போ ட்ராவல்லர் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே இருந்த மகேஸ்வரியை தாக்கி அவரிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை கத்தி கூச்சல் போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகேஸ்வரி மூர்த்தியை தள்ளி விட்டு வாகனத்தில் இருந்து இறங்கி தப்பித்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து மகேஸ்வரி தனது வயதான பார்வை இழந்த தாயார் மற்றும் உறவினர்களிடம் கூறியதையடுத்து கடந்த 17ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மூர்த்தியின் டெம்போ டிராவலர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

கணவனை இழந்த மகேஸ்வரி பார்வை இழந்த அவரது தாயார் மற்றும் இரு  பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவர் காவல் துறையில் பெறும் குறைந்த ஊதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருவதாகவும்,  தனது சொந்த ஊரை சேர்ந்த அண்ணா என்று அழைத்து வந்த நபரே தன்னிடம் தவறாக நடந்த சம்பவத்தால் மனமுடைந்துள்ளதாவும் தெரிவித்தார் மகேஸ்வரி. மேலும் “இந்த  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும்  “இதுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது” எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். தலைமறைவாக உள்ள மூர்த்தியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com