

மத்தியபிரதேசத்தில் குவாலியரில் 17 வயது சிறுமி கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறை 12 மணி நேரத்திற்குள் தீர்த்து வைத்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தினரின் சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறை சிறுமியின் காதலன் இஷான் கான் மற்றும் அவரது உறவினர் அர்பாஸ் கான் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையின் போது, அந்த இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பலேனோ காரையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
காவல்துறையின் தகவல்படி, இஷானும் அந்தப் பதின்மவயதுப் பெண்ணும் சுமார் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது இந்த காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தெரிந்துள்ளது. எல்லாம் சுமூகமாக போய்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்தப் பெண் அவரது காதலனிடம் விலகத் தொடங்கியுள்ளார். காரணம், இஷான் வேறு ஒருவருடனான உறவினை குறித்து பேசியதால் அந்த சிறுமி படிப்படியாக விலகியுள்ளார். மேலும், அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இஷான், அவரது காதலியை கொலை செய்ய அவரது உறவினர் அர்பாஸுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முதலில் அந்த பதின்மவயது பெண்ணை நோட்டமிட்டதாகவும், பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பெண் புடவைக் கடையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கே.ஆர்.ஜி கல்லூரி அருகே அவரை வலுக்கட்டாயமாகக் கடத்தியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் அந்த பெண்ணை ஒரு பலேனோ காரில் ஏற்றி கேன்சர் ஹில்ஸுக்கு (மலைப்பகுதி) ஓட்டிச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட நிலையில் அந்த பெண்ணிடம் இஷான் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு, அந்த பதின்மவயது சிறுமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனால் காருக்குள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாக மாறியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இஷான் அவரது காதலியின் துப்பட்டாவை வைத்தே அவரது கழுத்தினை நெரித்துள்ளார். இந்நிகழ்வில் இஷானின் தூண்டுதலின் பேரில், அர்பாஸ் அந்தப் பதின்மவயதுப் பெண்ணின் கைகளைப் பிடித்துள்ளார். பின்னர், அந்த சிறுமியின் காதலனான இஷான், அந்த சிறுமியின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடலைப் புதர்களில் வீசிவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
புதர்களில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கம்பூ காவல் நிலைய போலீசார் திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து, தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தனர். மேலும், இதுகுறித்த தீவிரமாக போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போதுதான் இந்த நிகழ்வில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவாத் புராவைச் சேர்ந்த அந்தப் பதின்வயதுப் பெண், நயா பஜாரில் உள்ள ஒரு புடவை மையத்தில் பணிபுரிந்து வந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஒநிலையில் பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காணாமல் போனதாகவும், கடத்தல் தொடர்பாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் இஷான் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். காவல்துறை ஆய்வு செய்த சிசிடிவி காட்சிகளில், இஷான் அந்தப் பெண்ணின் கடைக்கு வெளியே நோட்டமிடுவது தெரிந்துள்ளது. குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில், இஷான் அந்தக் காரை கொலை செய்வதற்காக இரவல் வாங்கி எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த அர்பாஸை போலீசார் முதலில் கைது செய்துள்ளனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, திங்கள்கிழமை இரவு இஷானும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் போது, இஷான் கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அந்தச் சிறுமி தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால், அவரைக் கொல்ல ஏற்கனவே முடிவு செய்திருந்ததாக அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இந்த வழக்கு 12 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாக சிஎஸ்பி தரம்வீர் சிங் தெரிவித்துள்ளார். திருமணம் செய்ய மறுத்ததே கொலைக்கான முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.