AI-யை பயன்படுத்தி மிரட்டிய "மிருகம்".. தனது இரு சகோதரிகளின் மானத்துக்கு பயந்து.. உயிரை விட்ட தம்பி!

இந்தத் தொழில்நுட்பத்தின் அபாயகரமான விளைவுகளையும், சமூகத்தின் பாதுகாப்பின்மையையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது
AI-யை பயன்படுத்தி மிரட்டிய "மிருகம்".. தனது இரு சகோதரிகளின் மானத்துக்கு பயந்து.. உயிரை விட்ட தம்பி!
Published on
Updated on
2 min read

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள பாஸல்வா காலனியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் மிரட்டப்பட்டு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் அபாயகரமான விளைவுகளையும், சமூகத்தின் பாதுகாப்பின்மையையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

தற்கொலைக்குத் தூண்டிய நண்பன்

தற்கொலை செய்துகொண்ட அந்த மாணவர், ராகுல் பார்தி (வயது 19). இவர் என்ஐடி ஃபரிதாபாத்தில் உள்ள டிஏவி கல்லூரியில் வணிகவியலில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ராகுல் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அவரது நண்பரான சஹில் என்பவர்தான் இந்தத் துயரமான செயலுக்குக் காரணமாக இருந்துள்ளார். சஹில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராகுலின் ஆபாசப் புகைப்படங்களையும், காணொளிகளையும் உருவாக்கி, அவற்றைக் காட்டி ராகுலை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றுள்ளார்.

இந்த மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலால் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளான ராகுல், சனிக்கிழமை அன்று விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளை (சல்ஃபாஸ்) உட்கொண்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பழைய ஃபரிதாபாத் காவல் நிலையத்தில், தற்கொலைக்குத் தூண்டியதாக (குற்றவியல் சட்டம் பிரிவு 108-இன் கீழ்) சஹில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தற்போது சஹிலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல் செய்தி அம்பலம்

ராகுலின் தந்தை மனோஜ் காவல்துறையிடம் அளித்த புகாரில், மகன் ராகுல் பயன்படுத்திய தொலைபேசியைப் பார்த்தபோது, ராகுலுக்கும், சஹிலுக்கும் இடையே நடந்த நீண்ட உரையாடல் குறித்துத் தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடலின்போது, சஹில் என்பவர் ராகுலுக்குச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்களையும், காணொளிகளையும் அனுப்பி வைத்து, உடனடியாகப் பணம் கேட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த உரையாடலின் கடைசிப் பகுதியில், "நீ கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால், இந்தப் புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவேன்" என்று சஹில் மிரட்டியுள்ளார்.

சகோதரிகளின் புகைப்படம்

இந்தச் சம்பவத்தின் கூடுதல் தகவலாக, சஹில், ராகுல் பார்தியின் மூன்று சகோதரிகளின் உருவங்களைச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆபாசமான முறையில் சித்தரித்து, அந்தப் புகைப்படங்களைக் காட்டியும் ராகுலை மிரட்டியுள்ளார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சகோதரிகளின் மானம் பறிபோய்விடும் என்ற பயத்திலும், இந்த மிரட்டலுக்கு எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமலும் ராகுல் மனதளவில் உடைந்து போய், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொடூரச் செயல், நட்பின் பெயரால் நடந்த துரோகம் மட்டுமின்றி, புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு, தனி மனிதர்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய ஒரு ஆபத்தான ஆயுதமாகவும் மாறியிருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

நீங்கள் மன உளைச்சலில் இருந்தால் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் தற்கொலை எண்ணங்களுடன் போராடினால், தயவுசெய்து உதவிக்கு அணுகவும். மாநில அல்லது தேசிய அளவில் உள்ள மனநல உதவி மையங்களைத் தொடர்புகொள்வது அல்லது மருத்துவ ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com