
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதுடைய அல்போன்ஸ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ராகரம் பகுதியில் மிக்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் மிசசர் போடும் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக கே.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பவன் குமார் என்பவரும் அவரது தம்பியான 17 வயதுடைய சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் வேலை செய்து வந்து உள்ளனர்.
இந்நிலையில் பவன்குமாருக்கும் மிச்சர் கம்பெனி ஓனரான அல்போன்ஸ் மனைவி சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இது குறித்து அல்போன்ஸ்க்கு தெரிந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பவன் குமார் மற்றும் அவரது தம்பி சந்தோஷ் குமார் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று உள்ளனர்.
அதன் பின்னர் பவன் குமார் திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த மரிமானிகுப்பம், தோட்டி குட்டை என்ற கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீடான சுசிலாபாய் என்பவரது வீட்டில் தங்கி வந்த நிலையில் சத்யாவும், பவன்குமாரும் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு பலமுறை தனிமையில் சந்தித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அல்போன்ஸ் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மனைவி சத்யா தன்னுடைய கணவன் ஆல்போன்ஸ் மீது பெங்களூரு கே.பி. அக்ரஹாரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அல்போன்ஸ் கள்ளக்காதலனான பவன்குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்து அவரது தம்பியை கடத்தி வைத்து கொண்டு மிரட்டியுள்ளனர்.
அதன்பின்னர் மிட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 அறை எடுத்து அங்கு பவன் குமாரின் தம்பி சந்தோஷ்குமாரை அடித்து துன்புறுத்தி கையை உடைத்து “உன் அண்ணன் எங்கே உள்ளான்” என கேட்டுள்ளனர். அதன் பின்னர் சந்தோஷ் குமாரை அழைத்து கொண்டு இன்று அதிகாலை 4 மணியளவில் அவர்களது பாட்டி வீட்டிற்கு நண்பன் பார்த்திபன் உட்பட 3 பேருடன் சென்ற அல்போன்ஸ் சென்று கதவை தட்டி உள்ளார்.
அப்போது கதவை திறந்த பவன் குமாரின் தாய் மீராபாய் சந்தோஷ் குமாரை பார்த்து “நீ பெங்களூரிலிருந்து எப்ப வந்த” என கேட்டுக் கொண்டிருந்த போதே மறைந்திருந்த அல்போன்ஸ் மற்றும் அவருடன் வந்த பார்த்திபன் உட்பட மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்து பவன்குமாரை தேடி சென்று கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து காரில் நண்பர்களுடன் தப்பி சென்றுள்ளனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பவன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பவன்குமார் உயிரிழந்துள்ளார்.
மேலும் அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் அடித்ததில் காயம் அடைந்த சந்தோஷ்குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற குரிசிலாப்பட்டு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை தேடி வருகின்றனர். மேலும் வேலை பார்த்த இடத்தில் ஓனரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளகாதல் விவகாரம் தொடர்பாக இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.