
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43), இவர் டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி சத்தியபிரியா (33) என்ற மனைவியும், மோனிஷ்ராம் (12), ஸ்ரீராம்பிரகாஷ் (10), சஷ்வந்த் (7) என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 13 வருடங்கள் ஆன நிலையில். சத்தியபிரியா நடவடிக்கை மீது சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் தோட்டத்தில் சத்தியபிரியா கிணற்றுக்கு அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த கணவர் சக்திவேல் யாருடன் செல்போனில் பேசுகிறாய்? எனக் கேட்க கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சத்திய பிரியாவின் கையில் இருந்த செல்போனை பிடுங்குவதற்காக முயற்சித்த போது, இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிணற்றுக்கு அருகில் நின்று செல்போனை இருவரும் மாறி மாறி இழுத்துள்ளனர். இதனால் மனைவி சத்தியபிரியாவை கணவர் கிணற்றுக்குள் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. சுமார் 85 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சத்தியபிரியா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இதனை பார்த்து தா.பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் சடலமாக கிடந்த சத்தியபிரியா உடலை மீட்டனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சத்தியபிரியாவின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்