உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மூன்று சிறுமிகள், கட்டிடத்தின் 9-வது மாடியிலிருந்து குதித்து ம*ரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரத்தில், அந்தச் சிறுமிகளின் தந்தை சேத்தன் குமார் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. வணிகரான சேத்தன் குமாருக்கு இரண்டு மனைவிகள் என்பதும், அவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
தனது முதல் திருமணத்தில் குழந்தைகள் இல்லாத காரணத்தால், ஒரு குழந்தையைப் பெற வேண்டி தனது மனைவியின் தங்கைக்கே அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பின்னர் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவரது முதல் மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு சேத்தன் குமார், அவரது இரண்டு மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.
ம*ரணமடைந்த மூன்று சிறுமிகளில் (பாக்கி-12, பிராச்சி-14, விஷிகா-16) ஒருவர் முதல் மனைவியின் மகள் என்றும், மற்ற இருவர் இரண்டாவது மனைவியின் மகள்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதும், படிப்பில் ஆர்வம் குறைவு மற்றும் குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக அவர்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததும் போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந்தச் சிறுமிகள் கொரிய கலாச்சாரம் மற்றும் கொரிய ஆன்லைன் விளையாட்டுகளின் மீது தீவிர மோகம் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. தங்களுக்குத் தாங்களே கொரியப் பெயர்களைச் சூட்டிக்கொண்ட இவர்கள், அந்த விளையாட்டில் கொடுக்கப்பட்ட சவால்களைச் செய்து வந்துள்ளனர். "கொரியா தான் எங்கள் வாழ்க்கை, அங்கிருந்து எங்களை யாராலும் பிரிக்க முடியாது" என்று அவர்கள் தங்களது தற்கொ*லை குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
நள்ளிரவு 2:15 மணியளவில் அறையைப் பூட்டிக்கொண்டு தற்கொ*லை செய்துகொண்ட அந்தச் சிறுமிகள், ஒரு டைரியில் 8 பக்கங்களுக்குக் கடிதம் எழுதி வைத்துள்ளனர். "டைரியில் இருப்பவை அனைத்தும் உண்மை, அதை முழுமையாகப் படியுங்கள் அப்பா" என்று உருக்கமாக எழுதியுள்ளனர். மேலும் தங்களது தனிமை குறித்தும் சுவர்களில் எழுதி வைத்துள்ளனர். தந்தை செல்போன் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதித்ததே இவர்களை இந்த விபரீத முடிவுக்குத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.