சேலம் மாவட்டம், அம்மாபேட்டை, வையாபுரி உடையார் பகுதியை சேர்ந்தவர் 40 வயதுடைய தங்கம். இவர் அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பத்மா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தங்கம் கூலி தொழில் செய்து வந்தார். மேலும் பத்மா அருகில் உள்ள டேப் கட்டிங் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
இதற்கிடையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தங்கம் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி பத்மாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பத்மாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கு வேறு ஒரு ஆணுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் பத்மாவின் தயார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் பத்மா அவரது தாய்க்கு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
தொடர்ந்து சில சடங்குகள் செய்ய வேண்டி இருந்ததால் பத்மா அடிக்கடி அவரது தாய் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். இதனால் பத்மாவின் மீது ஏற்கனவே இருந்த சந்தேகம் அவரது கணவருக்கு மேலும் அதிகரித்த நிலையில் “தினமும் எவன் கூடத்தான் சுத்துற” என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனை பார்த்த அவரது மகள்கள் தாய் தந்தை இருவரையும் சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர்.
ஆனால் தொடர்ந்து கணவர் தங்கம் சந்தேகப்பட்டு மனைவியை அடித்து கொடுமைப் படுத்தி வந்த நிலையில் ஆத்திரமடைந்த பத்மா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தங்கம் மீது குழவி கல்லை போட்டு கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் உயிரிழந்த தங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி பத்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியே கணவனை குழவிகல் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.