விசாகப்பட்டினம், பாலகொண்டா மண்டலம், துமராடா கிராமம் அருகே உள்ள ஒரு உள்ளூர் குளத்தில் இருந்து 34 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, பார்வதிபுரம் மன்யம் மாவட்ட போலீசார், கொலை தொடர்பாக அப்பெண்ணின் காதலன், அவரது தோழி மற்றும் மேலும் ஒருவர் உட்பட மூன்று பேரைக் கைது செய்தனர். பலியான உஷா ராணி பாலகொண்டா மண்டலத்தில் உள்ள பர்னா சீதம்பேட்டா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் எம் சிங்குபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் மற்றும் அவரது பெண் தோழி கிருபாராணி மற்றும் அவரது நண்பர் தேஜேஸ்வர ராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உஷா ராணி முந்தைய அரசாங்கத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியுள்ளார். அப்போது சக தன்னார்வலரான புவனேஸ்வருடன் நட்பு கொண்டுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து, அடுத்தகட்டமாக தங்கள் திருமணத்திற்குத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதன் பின்புதான் உண்மை வெளியே வர தொடங்கியுள்ளது. புவனேஸ்வர் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராகப் பணிபுரியும் திருமணமான பெண்ணான கிருபராணியுடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். உஷா ராணி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாலும், கிருபராணியுடனான கள்ள உறவைத் தொடர முடிவு செய்ததாலும், புவனேஸ்வர் தனது கள்ளக்காதலி மற்றும் மற்றொருவரின் உதவியுடன் இந்தக் கொலையைத் திட்டமிட்டுள்ளார். திட்டத்தின்படி, புவனேஸ்வர், கிருபராணி மற்றும் தேஜேஸ்வர ராவ் ஆகியோர் உஷா ராணியைத் தங்கள் காருக்குள் அழைத்துச் சென்று, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். பின்னர், ஜூன் 6 அன்று, அவர்கள் உஷா ராணியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
முதலில், அந்த மூவரும் ஜூன் 6 ஆம் தேதி இரவு, ஸ்ரீகாகுளம் மாவட்டம் அமூலவலசா அருகே உள்ள ஒரு உள்ளூர் குளத்தில் காலஞ்சென்ற உஷா ராணியின் உடலை அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும், குளத்தில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், உடலை அங்கே காண முடிந்துள்ளது. கொலையை மறைப்பதற்காக, அவர்கள் குளத்திலிருந்து சடலத்தை மீட்டு, மன்யம் மாவட்டம், பாலக்கொண்டா மண்டலத்திலுள்ள துமராடா கிராமத்திற்குக் கொண்டு சென்று, சடலத்தின் மீது கனமான கற்களைக் கட்டி, அப்பகுதியில் இருந்த ஒரு குளத்தில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் சடலம் ஜூன் 9 அன்று தொட்டியில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறுதியாக புவனேஸ்வர், கிருபராணி மற்றும் தேஜேஸ்வர ராவ் ஆகியோரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்று போலீசார் மேலும் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.