
செங்குன்றம் அடுத்த தர்காஸ் பகுதியில் வாலிபர் ஒருவர் புதரில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருப்பதாக செங்குன்றம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்குன்றம் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் , திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை தாலுகா ,பெரியபாளையம் அடுத்த நெய்வேலி பஞ்சாயத்தை சேர்த்த ஏழுமலை என்பவரது மகன் ராஜேஷ் (வயது 17 ) என்பது தெரியவந்தது. இவர்
பணப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த மல்லிமாநகர் அருகில் விளையாட்டு மைதானம் இருந்ததால் , ஒருவேளை நேற்றிரவு அவ்விடத்தில் மதுவிருந்து நடைபெற்றதா ?அதில் கலந்து கொள்ள வந்த இவர் தகராறில் ஈடுபட்டாரா? அல்லது நர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகின்றனர், மேலும் பெரியபாளையத்தை சேர்ந்த இவர் செங்குன்றம் ஏன் வந்தார்? என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. தலை, மற்றும் இவர் அணிந்திருந்த சட்டையில் ரத்தக்கறைகள் இருந்ததால் கொலையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆவடி ஆணையரக செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலாஜி, செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையாளர் ராஜாராபர்ட் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார் .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.