கேரளாவில் மாயமான இளம்பெண்.. கர்நாடகாவில் நடந்த கோரக் கொலை! காதலனின் பகீர் திட்டம்!

கேரளாவில் நடந்த திருட்டுக்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது....
murder
murder
Published on
Updated on
1 min read

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூரில் ஒரு வீட்டில் 30 பவுன் நகைகளும் ₹5 லட்சமும் திருடுபோன சம்பவம், ஒரு இளம் பெண்ணின் கொடூரமான கொலை வழக்காக மாறியுள்ளது. திருட்டு வழக்கை விசாரித்து வந்த காவல்துறை, 22 வயதான தர்ஷிதா என்ற இளம்பெண் மைசூருவில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த கொலையை அரங்கேற்றியது அவரது காதலன் சித்தராஜு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருட்டு முதல் கொலை வரை நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் ஹன்சூர் தாலுகாவைச் சேர்ந்த தர்ஷிதா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள சுபாஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுபாஷ் வெளிநாட்டில் வேலை செய்வதால், தர்ஷிதா தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை, தர்ஷிதாவின் மாமியார் மற்றும் மைத்துனர் சூரஜ் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த நகைகளும் பணமும் திருடு போயிருந்தன.

மாயமான மருமகள்:

திருட்டு நடந்த அன்று, தர்ஷிதா தனது பெற்றோரைப் பார்ப்பதற்காகக் கர்நாடகாவுக்குச் சென்றிருந்தார். வீட்டில் திருட்டு நடந்த விவரத்தை அவரிடம் சொல்ல குடும்பத்தினர் பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவரால் அழைப்பை எடுக்க முடியவில்லை. பின்னர், அவரது தொலைபேசியை எடுத்த சித்தராஜு, தர்ஷிதா விரைவில் திரும்பி வருவார் என்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

திட்டமிட்ட கொலை:

குடும்பத்தினர் தர்ஷிதாவிற்காகக் காத்திருந்த நிலையில், அடுத்த நாள் மைசூருவில் உள்ள ஒரு விடுதியில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. காவல்துறை விசாரணையில், சித்தராஜுவும் தர்ஷிதாவும் ஏழு ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பது தெரியவந்தது. தர்ஷிதா தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், ஒரு மாதத்திற்கு முன்பே அவளைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்க சித்தராஜு திட்டமிட்டிருக்கிறார்.

மின்கம்பியைப் பயன்படுத்தி கொடூரமான கொலை:

கொலைக்குப் பிறகு, தர்ஷிதாவின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு, "மொபைல் போன் வெடித்ததில் அவர் இறந்துவிட்டார்" என்று விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் சந்தேகித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினரின் விசாரணையில், சித்தராஜு தர்ஷிதாவின் வாயில் மின்சாரக் கம்பியை வலுக்கட்டாயமாகச் செருகி, மின்சாரம் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

திருட்டுக்கும் கொலைக்கும் உள்ள தொடர்பு:

இந்தக் கொடூரமான கொலைக்கும், கேரளாவில் நடந்த திருட்டுக்கும் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது கர்நாடகா காவல்துறை கொலை வழக்கையும், கேரளா காவல்துறை திருட்டு வழக்கையும் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் காணாமல் போன குழந்தை மற்றும் திருடுபோன நகைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com