
மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன்- தனபாக்கியம் ஆகியோரது மகன் ரூபன்ராஜ். இவருக்கும் உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி- செல்வி தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. தொடக்கத்தில் ரூபன்ராஜ் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் 300 பவுன் நகை வரதட்சணையாக கேட்டதாக சொல்லப்படுகிறது. பிரியதர்ஷினி குடும்பத்தினர் அவ்வளவு நகை கொடுக்கமுடியாது என 150 பவுன் நகைகள் மட்டும் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக திருமணத்தின் போது இருந்தே இரு குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திருமணமாகி பிரியதர்ஷினி ரூபன்ராஜ் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது நகை பணம் கேட்டு ரூபன்ராஜ் குடும்பத்தினர் பிரியதர்ஷினியை கொடுமை செய்ததாக கூறப்படும். எனவே பிரியதர்ஷினிக்கு ரூபன்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் காரணமாக ரூபன்ராஜை விட்டு பிரியதர்ஷினி பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் கணவருக்கு அவரது குடும்பத்தினர் வேறு திருமணம் செய்து வைப்பதாக கிடைத்த தகவலால், மீண்டும் தன்னுடன் கணவரை சேர்த்து வைக்க கோரி தனது மாமனார் மற்றும் மாமியாரை சந்தித்து பேசி விட்டு வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் தனது தாய் வீட்டில் அதிகமான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பிரியதர்ஷினி மாத்திரை உண்டதை அறிந்த அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரியதர்ஷினி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் ப்ரியதர்ஷினியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கணவர் ரூபன்ராஜ் , மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரியதர்ஷினியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருந்து சடங்கிற்காக அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இளம் பெண் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் செய்தியை கேட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.