
சேலம்: ஓமலூர் அருகேயுள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் ஹபிசேனா, சேலம் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். இந்தநிலையில், கல்லூரிக்கு இன்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து மாங்குப்பை கிராமத்தில் உள்ள ஏரியில் விளையாடி கொண்டிருந்துள்ளார்.
இதையடுத்து அங்கு விளையாடி கொண்டிருந்த நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து, அங்கு மீன் பிடிப்பதற்காக வைத்திருந்த படகில் ஏரிக்கு நடுவே தண்ணீரில் சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் குளித்து நீச்சலடித்துள்ளார். ஏரியின் நடுவே ஆழம் அதிகமாக இருந்த நிலையில், ஹபிசேனாவால் அதிக நேரம் நீச்சலடிக்க முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார்.
மேலும் படிக்க | நடுக்கடலில் கவிழ்ந்த படகு...மீனவர்களின் நிலை என்ன?
அப்போது சக நண்பர்கள் அவரை மீட்டு படகில் ஏற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவசர அவசரமாக ஏரியில் இருந்து வெளியே வந்து, கிராமத்தில் உள்ளவர்களிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து கிராமப்புற இளைஞர்கள் விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய மாணவன் ஹபிசேனாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியில் பாதுகாப்பு வளையங்களுடன் இறங்கி, மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை நான்கு மணிக்கு ஏரியில் மூழ்கிய மாணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆனால், தற்போது வரை மாணவர் கிடைக்கவில்லை.
இதனிடையே நீச்சல் தெரிந்த உள்ளூர் நபர்களும், லாரி டியூப்களை கொண்டு ஏரியில் இறங்கி தேடி வருகின்றனர். ஆனால், ஆழம் அதிகமாகவும், ஏரியின் மையப்பகுதியில் களிமண் சேறும் அதிகமாக இருப்பதால் மாணவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு குழுக்களாக தொடர்ந்து மாணவரை தேடி வருகின்றனர்.