சென்னை வடபழனியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து குமரன் நகர் 7-வது தெருவில் நிறுத்தி இருக்கும், காரை கவர் போட்டு மூடிவிட்டு வரும்படி கூறியிருக்கிறார். ஆனால் சிறுவன், தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு, குமரன் நகர் பிரதான சாலை வழியாக காரை ஓட்டிச்சென்றிருக்கிறார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் நின்ற ஆட்டோ மற்றும் சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது மோதியதுடன், ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. இதில் சாலிகிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (69), மற்றும் கங்காதரன் (49) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதுபற்றி பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன், மற்றும் சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த அவனது தந்தை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 14 வயது சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சிறுவனின் தந்தை புழல் சிறையில் அடைக்கப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், கார் மோதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மகாலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்