திருமணம் முடிந்து முதல் பிறந்தநாள்: கூர்க்கில் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா செய்த கலாட்டா - ஒரு நாள் தங்குவதற்கு இவ்வளவு லட்சங்களா?

திருமணத்திற்குப் பிறகு ராஷ்மிகா கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், அதனைத் தனது பிறந்த மண்ணிலேயே கொண்டாட அவர் விரும்பியுள்ளார்.
கூர்க்கில் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா
கூர்க்கில் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா
Published on
Updated on
2 min read

தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா தங்களின் திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக ராஷ்மிகாவின் சொந்த ஊரான கூர்க்கிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி உதய்பூரில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ராஷ்மிகா கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், அதனைத் தனது பிறந்த மண்ணிலேயே கொண்டாட அவர் விரும்பியுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பாரம்பரியமான 'குடகு' முறைப்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது. அதில் ராஷ்மிகா குடகு மாநிலத்தின் பாரம்பரிய சேலை அணிந்து தனது கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்த்தார்.

இந்த நட்சத்திர தம்பதிகள் தங்கியிருந்த 'எவால்வ் பேக்' (Evolve Back) ரிசார்ட் நிர்வாகம், அவர்கள் தங்கியிருந்த புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளது. இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த தம்பதிகளான ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவைத் தங்களது விடுதியில் உபசரிப்பதில் பெருமிதம் கொள்வதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு குடகுப் பெண்ணாகத் தனது கணவருக்குத் தனது சொந்த மண்ணின் அழகையும், கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துவதில் ராஷ்மிகா மிகுந்த ஆர்வம் காட்டியதாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. இவர்களது வருகையால் அந்த ரிசார்ட் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் காபி மற்றும் மசாலாத் தோட்டங்கள் சூழ இந்த சொகுசு ரிசார்ட் அமைந்துள்ளது. முன்பு 'ஆரஞ்சு கவுண்டி' என்று அழைக்கப்பட்ட இந்த விடுதி, குடகு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வில்லாக்களில் தனிப்பட்ட நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன. இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கான செலவு குறித்துக் கேட்டால் சாதாரண மக்கள் தலைசுற்றிப் போவார்கள். இங்கு ஒரு நாள் தங்கி காலை மற்றும் இரவு உணவு அருந்த ஒரு தம்பதிக்கு மட்டும் சுமார் 1,03,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இயற்கையோடு இணைந்த தங்குமிடங்கள் மட்டுமின்றி, இங்கு பிரத்யேகமான காபி அருங்காட்சியகமும் உள்ளது. இதில் கூர்க்கின் காபி வரலாறு மற்றும் அதன் சாகுபடி முறைகள் பற்றிச் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ளலாம். மேலும், வயல்வெளிகளைப் பார்த்தபடி அமைக்கப்பட்ட வாசிப்பு அறை மற்றும் பழமையான ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் எனப் பல சிறப்பம்சங்கள் இங்கு உள்ளன. பெரியவர்களுக்கெனத் தனியாகவும், குடும்பமாக வருபவர்களுக்கெனத் தனியாகவும் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு வசதிகள் கொண்ட இடத்தில்தான் ராஷ்மிகா தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

கூர்க் அல்லது குடகு என்று அழைக்கப்படும் இந்த மலைப்பிரதேசம் அதன் மூடுபனி சூழ்ந்த மலைகளுக்கும், காபித் தோட்டங்களுக்கும் உலகப் புகழ்பெற்றது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருப்பதால், இங்குள்ள பல்லுயிர் பெருக்கம் மற்றும் அடர்ந்த காடுகள் பயணிகளைக் கவரும் விதமாக இருக்கும். தங்களின் திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் திரைத்துறையினருக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய இந்த தம்பதி, தற்போது குடும்பத்தினருடன் மட்டும் நேரத்தைச் செலவிட இந்த அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ராஷ்மிகா மற்றும் விஜய்யின் இந்த கூர்க் பயணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com