பேரிடரை பார்க்கவே சுற்றுலா செல்கிறார்களா? வேகமாக வளர்ந்து வரும் வித்தியாசமான ‘Dark Tourism’!

இதன் பின்னணியில் “Dark Tourisim” எனப்படும் ஒரு வகையான சுற்றுலா உள்ளது.
பேரிடரை பார்க்கவே சுற்றுலா செல்கிறார்களா? வேகமாக வளர்ந்து வரும் வித்தியாசமான ‘Dark Tourism’!
Published on
Updated on
2 min read

சுற்றுலா என்றாலே அழகான மலைகள், கடற்கரைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அல்லது இயற்கைக் காட்சிகளை ரசிப்பதுதான் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால் சீனாவில் தற்போது இதற்கு முற்றிலும் மாறான ஒரு புதிய பயணப் போக்கு கவனம் பெற்றுள்ளது. புயல், கனமழை, திடீர் வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகளை செயற்கையாக உருவாக்கி, அவற்றை நேரில் அனுபவிப்பதற்காக மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த அனுபவப் பயணங்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையான பேரிடரின் ஆபத்து இல்லாமல், அதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு உயிர் காக்கும் முறைகளையும் கற்றுக்கொள்வதே இதன் நோக்கமாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் “Dark Tourisim” எனப்படும் ஒரு வகையான சுற்றுலா உள்ளது. பொதுவாக போர், இயற்கைப் பேரழிவு, மனித உயிரிழப்பு அல்லது வரலாற்றில் நடந்த துயர சம்பவங்களுடன் தொடர்புடைய இடங்களை பார்வையிடுவது டார்க் டூரிசம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் உருவாகி வரும் புதிய வடிவம் அதிலிருந்து சற்று மாறுபட்டது. ஏற்கனவே நடந்த பேரழிவின் இடத்துக்குச் செல்வதற்குப் பதிலாக, பேரழிவு போன்ற சூழ்நிலையே செயற்கையாக உருவாக்கப்படுகிறது. அந்த சூழலில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும், ஆபத்திலிருந்து எப்படி தப்ப வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள்.

கிழக்கு சீனாவின் ஹாங்சோ நகரில் செயல்பட்டு வரும் ல்வ்சிங் பேஸ் என்ற மையம் இந்தப் புதிய முயற்சியின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படும் இந்த மையம், சீனாவின் முதல் முழுமையான பேரிடர் அனுபவப் பயிற்சி மையமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சாதாரண சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பதிலாக, செயற்கை புயல், கடுமையான மழை, திடீர் நகர்ப்புற வெள்ளம் போன்ற சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் பேரிடர் நேரத்தில் ஏற்படும் பதற்றத்தையும் குழப்பத்தையும் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மையத்தில் உருவாக்கப்படும் செயற்கை புயலின் காற்றின் வேகம் மணிக்கு 165 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்வது போன்ற சூழலும், திடீரென தண்ணீர் பெருக்கெடுப்பது போன்ற காட்சிகளும் உருவாக்கப்படுகின்றன. பயிற்சியில் பங்கேற்பவர்கள் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்த பிறகே இந்த அனுபவத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பயிற்சியாளர்கள் அவர்களுடன் இருந்து, ஆபத்து ஏற்பட்டால் எவ்வாறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குகின்றனர்.

இதற்கான கட்டணமும் சாதாரண சுற்றுலா அனுபவத்தைவிட அதிகமாக உள்ளது. ஒரு பெரியவருக்கான தனிப்பட்ட அனுமதிச் சீட்டின் விலை 899 சீன யுவான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கான சிறப்பு தொகுப்புகள் சுமார் 5,000 யுவான் வரை செல்கின்றன. இதில் காட்டுப்பகுதியில் உயிர் பாதுகாப்பு, நீரில் மீட்பு நடவடிக்கைகள் போன்ற கூடுதல் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன. 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட பயிற்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த அனுபவம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருப்பதாக பங்கேற்பாளர்கள் கருதவில்லை. வெள்ளம் போன்ற சூழ்நிலையில் தண்ணீர் வேகமாக நிரம்பும்போது ஏற்படும் அச்சம் உண்மையான பேரிடரைப் போன்றே இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். சில நேரங்களில் பயிற்சியில் இருப்பதை மறந்து, உண்மையான ஆபத்தில் சிக்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தனிப்பட்ட தைரியம் மட்டுமின்றி, குழுவாக இணைந்து செயல்படுதல், ஒருவருக்கொருவர் உதவுதல் போன்ற திறன்களும் வளரக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த மையத்துக்கு 2024ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து 1.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் இந்த அனுபவங்கள் தொடர்பான காணொளிகள் பரவியதும், இளம் தலைமுறையினரிடையே ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வழக்கமான சுற்றுலாவைவிட வித்தியாசமான அனுபவத்தை தேடுபவர்களுக்கு இது புதிய வாய்ப்பாக மாறியுள்ளது. ஆபத்தான சூழ்நிலையை பாதுகாப்பான கட்டுப்பாட்டுக்குள் அனுபவிக்க முடியும் என்ற கருத்தும் இதன் பிரபலத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புதிய சுற்றுலா முறைக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பேரிடர் என்பது பலரின் வாழ்க்கையை சிதைக்கும் உண்மையான துயரம். வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள், புயலில் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் அல்லது இயற்கைப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த வேதனையை பணம் கொடுத்து சில மணி நேரம் செயற்கையாக அனுபவிப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பேரிடர்களை வணிகப் பொருளாக மாற்றுவது, உண்மையான பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை சாதாரண பொழுதுபோக்காக காட்டும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், இதுபோன்ற மையங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் உயிர் காக்கும் பயிற்சிக்கான இடங்களாக செயல்பட்டால் அதன் பயன் வேறுபட்டதாக இருக்கலாம். இயற்கைப் பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய நிலையில், பொதுமக்களுக்கு அடிப்படை மீட்பு அறிவு, அவசரநிலை செயல்பாடு மற்றும் குழு ஒருங்கிணைப்பு போன்ற திறன்களை கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் அதற்காக உண்மையான பேரிடர்களின் துயரத்தை மறந்து விடாமல், மரியாதையுடனும் பொறுப்புடனும் இந்த அனுபவங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

சீனாவில் தற்போது உருவாகி வரும் இந்த புதிய போக்கு, சுற்றுலா உலகம் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு வித்தியாசமான உதாரணமாக உள்ளது. மக்கள் இனி வெறும் இடங்களைப் பார்ப்பதை மட்டுமல்லாமல், தங்களை நேரடியாக ஈடுபடுத்தும் அனுபவங்களையும் தேடுகின்றனர். ஆனால் ஒரு பேரிடரை “அனுபவமாக” மாற்றும்போது, அதிலிருந்து உயிர் காக்கும் அறிவை பெறுவதற்கும், பிறர் அனுபவித்த துயரத்தை வணிகமாக்குவதற்கும் இடையே இருக்கும் மிக நுண்ணிய எல்லையை பாதுகாப்பது அவசியமாகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com