வீட்டிலேயே சுவையான தந்துாரி சிக்கன் செய்வது எப்படி? இனி கடையைத் தேடி அலைய வேண்டாம்!

தந்துாரி கோழி இறைச்சிக்குத் தனிச் சுவை கொடுக்கும் இரண்டாவது மற்றும் முக்கியமான மசாலா...
Chicken_Whole_in_tandoori_With_Skin
Chicken_Whole_in_tandoori_With_Skin
Published on
Updated on
2 min read

தந்துாரி சிக்கனை வீட்டிலேயே எந்தவிதச் சிரமமும் இன்றி எப்படித் தயாரிப்பது என்பதற்கான செய்முறையை இங்கே காணலாம். இதற்கு, பெரிய தந்துார் அடுப்பு தேவையில்லை, சாதாரண சமையல் அடுப்பு அல்லது மின்சார அடுப்பைப் பயன்படுத்தியே தயாரித்துவிடலாம்.

முதலில், தந்துாரி செய்யத் தகுந்த கோழி இறைச்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அளவிலான முழுக்கோழியாகவோ அல்லது கோழியின் கால்கள் (லெக் பீஸ்), மார்புப் பகுதித் துண்டுகளாகவோ இருக்கலாம். இறைச்சியின் மீது மசாலா நன்கு ஊறுவதற்காக, கத்தியால் ஆழமான கீறல்களைப் போட வேண்டும். கீறல்கள் ஆழமாக இருப்பது அவசியம். இதுவே சுவையின் முதல் இரகசியம். அடுத்து, மசாலா கலவையைத் தயாரிக்க வேண்டும். இதற்கு எலுமிச்சைச் சாறு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையை கீறல்கள் போட்ட கோழி இறைச்சியின் மீது நன்கு பூச வேண்டும். இந்தக் கலவையானது கோழியின் ஒவ்வொரு துண்டின் உள்ளேயும் செல்ல வேண்டும். இந்தப் பூச்சு சுமார் அரை மணி நேரம் ஊறுவது மிகவும் அவசியம்.

இதை அடுத்து, தந்துாரி கோழி இறைச்சிக்குத் தனிச் சுவை கொடுக்கும் இரண்டாவது மற்றும் முக்கியமான மசாலா கலவையைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கலவையைத் தயாரிக்கக் கெட்டியான புளிக்காத தயிர், சிறிது கடலை மாவு, மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, கருமிளகுத் தூள், கஸ்தூரி வெந்தய இலை மற்றும் நிறத்துக்காகச் சிறிதளவு காஷ்மீரி மிளகாய்த் தூள் (இது அதிக காரம் தராமல் நல்ல நிறம் கொடுக்கும்) ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவை நீர்த்துப் போகாமல் கெட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கோழி இறைச்சியின் மேல் ஒட்டிப் பிடித்துக்கொண்டு, சமைக்கும்போது உதிர்ந்து போகாமல் இருக்கும். இந்தக் கெட்டியான கலவையை முதல் கலவை பூசப்பட்ட கோழித் துண்டுகளின் மீது மீண்டும் நன்கு பூச வேண்டும். கோழியின் எல்லாப் பகுதிகளிலும் இந்தக் கலவை சீராகப் பரவியுள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சுவையின் முழுமையான ரகசியம் இந்தக் கலவையை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோம் என்பதில் தான் உள்ளது. இந்தக் கோழித் துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து, அதன் மீது ஒரு மூடியைப் போட்டு, குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) குறைந்தது ஆறு மணி நேரம் முதல் அதிகபட்சம் பன்னிரண்டு மணி நேரம் வரை ஊற வைப்பது மிக அவசியம். எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அவ்வளவு ஆழமாக மசாலா கோழி இறைச்சியின் உள்ளே சென்று, சமைத்த பிறகு மென்மையான சுவையையும் நறுமணத்தையும் கொடுக்கும். குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது ஊற வைக்கவில்லை என்றால், தந்துாரி கோழி இறைச்சியின் உண்மையான சுவை கிடைக்காது.

ஊறிய பிறகு, கோழித் துண்டுகளைச் சமைக்கும் முறைக்கு வரலாம். பாரம்பரியமாக இதைத் தந்துார் அடுப்பில் நேரடியாகச் சுட்டுத் தான் செய்வார்கள். வீட்டில் இதைச் செய்ய, நீங்கள் மின்சார அடுப்பைப் பயன்படுத்தலாம். அல்லது சமையல் அடுப்பில் ஒரு தட்டையான பாத்திரத்தை வைத்து, அதன் மேல் கம்பியிலான சுடும் சட்டியை (Grill) வைத்துச் செய்யலாம். கோழித் துண்டுகளை மெதுவாக, மிதமான தீயில் வைத்து, அடிக்கடித் திருப்பிப் போட வேண்டும். ஒவ்வொரு முறை திருப்பிப் போடும்போதும், சிறிதளவு எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெயைத் துண்டுகளின் மேல் பூசினால், கோழி விரைவாகவும், மொறுமொறுவென்றும் சமைக்கப்படும். இப்படிச் சுடும்போது, கோழித் துண்டுகள் சமைக்கப்பட்டு, அதன் வெளிப்புறம் ஒரு தங்க நிறத்தைப் பெற்று, அந்த தந்துாரி வாசனையை வீடு முழுவதும் பரப்பத் தொடங்கும். முழுமையாகச் சமைக்கப்பட்ட பின்னர், சூடாகப் பரிமாறலாம். எலுமிச்சைப் பழம் மற்றும் தயிர் சட்னியுடன் இதைச் சேர்த்துச் சாப்பிட்டால், அதன் சுவை அல்டிமேட்டா இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com