EPFO விதிகள் மாற்றம் - 100% PF தொகையை எடுக்கலாம்! சுலபமான புதிய விதிகள் என்னென்ன?

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில்....
EPFO Rule Change
EPFO Rule Change
Published on
Updated on
1 min read

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), அதன் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், பணத்தை எடுப்பதற்கான (Withdrawal) விதிகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களால், சுமார் ஏழு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த 238வது மத்திய அறங்காவலர் வாரிய (CBT) கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

EPFO, இதுவரை இருந்த 13 தனித்தனி விதிகளை ஒன்றிணைத்து, இனி பணத்தை எடுக்கும் நடைமுறையைச் சுலபமாக்கியுள்ளது. இனிமேல், PF தொகையைப் பெறுவது மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வரும்:

அத்தியாவசியத் தேவைகள் (Essential Needs): நோய், கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்காக.

வீட்டுத் தேவைகள் (Housing Needs): வீடு கட்டுதல், வாங்குதல் போன்றவற்றுக்காக.

சிறப்புச் சூழ்நிலைகள் (Special Circumstances): எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் தொகையைப் பெறுதல்.

முக்கிய மாற்றங்கள்:

100% வரை எடுக்கலாம்: ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட, உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பில் உள்ள 100% தொகையையும் இனி எடுக்க முடியும்.

அதிக முறை எடுக்க அனுமதி: கல்வித் தேவைக்காக 10 முறை வரையிலும், திருமணத் தேவைக்காக 5 முறை வரையிலும் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. (முன்னதாக, இவை இரண்டிற்கும் சேர்த்து மொத்த வரம்பு 3 ஆக இருந்தது).

குறைந்தபட்ச சேவைக்காலம் குறைப்பு: பகுதியளவு (Partial) PF தொகையை எடுப்பதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் இப்போது 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காரணம் தேவையில்லை: 'சிறப்புச் சூழ்நிலைகள்' பிரிவின் கீழ் பணம் எடுக்கும்போது, உறுப்பினர்கள் அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டியதில்லை.

ஓய்வூதியப் பாதுகாப்பு உறுதி

குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance): உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 25% தொகையை குறைந்தபட்ச இருப்பாக வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, உறுப்பினர்கள் தொடர்ந்து 8.25% ஆண்டு வட்டி ஈட்டவும், வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்கவும் உதவும்.

தானியங்கி செட்டில்மென்ட்: புதிய விதிகளால், பணம் எடுக்கும் கோரிக்கைகள் எந்த ஆவணங்களும் தேவையில்லாமல் தானாகவே தீர்க்கப்படும் ('Automatic settlement').

குறிப்பு: இறுதி PF தொகையை எடுப்பதற்கான காத்திருப்பு காலம் இரண்டு மாதங்களிலிருந்து 12 மாதங்களாகவும் (ஒரு வருடம்), இறுதி ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்கான காத்திருப்பு காலம் இரண்டு மாதங்களிலிருந்து 36 மாதங்களாகவும் (மூன்று ஆண்டுகள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com