இண்டிகோவுக்குள் நடந்த அதிகாரப் போர்! நட்பு முறிந்தது ஏன்? இணை நிறுவனர் ராக்கேஷ் கங்க்வால் ஏன் திடீரென விலகினார்?

மலிவான கட்டணத்தில், எல்லா நேரமும் விமானங்களை இயக்கி, கட்டுப்பாட்டுடன் கூடிய விமான நிறுவன மேலாண்மைக்கு உலகளாவிய ஒரு பாடமாக மாறியது
Rakesh Gangwal’s exit from IndiGo board news in tamil
Rakesh Gangwal’s exit from IndiGo board news in tamil
Published on
Updated on
2 min read

உலகின் மிக அதிக லாபம் ஈட்டும் விமான நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இண்டிகோ (IndiGo), தற்போது இரண்டு முக்கியக் காரணங்களுக்காகப் பேசுபொருளாகியுள்ளது. ஒன்று, அந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு காலாண்டில் இழந்த இழப்பு (இது அந்நியச் செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்டது). மற்றொன்று, இந்த நிறுவனத்தை உருவாக்க உதவிய இணை நிறுவனர் ராக்கேஷ் கங்க்வால், தான் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை விட்டு கிட்டத்தட்ட முழுவதுமாக அமைதியாக வெளியேறியதுதான்.

இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் மிகவும் திறமையான மற்றும் செல்வாக்கு மிக்க விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோவை அவர் உருவாக்கினார். ஆனால், 2021 டிசம்பரில் 36 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த அவருடைய பங்குகள், 2025 அக்டோபருக்குள் 5 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் மட்டும், அவர் சுமார் 45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் பங்குகளை விற்று, படிப்படியாக நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவருடைய இந்த விலகல், இந்தியக் கார்ப்பரேட் உலகில் மிகவும் சிக்கலான நிறுவனர் வெளியேற்றங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இண்டிகோ நிறுவப்பட்ட கதை, இரு வெவ்வேறு பலம் கொண்ட மனிதர்களின் கூட்டாண்மையால் உருவானது. ராகுல் பாட்டியா மற்றும் ராக்கேஷ் கங்க்வால் ஆகிய இருவருக்கும் இடையில் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட கூட்டாண்மையில் உருவானதே இண்டிகோ. பாட்டியாவுக்கு இந்திய வணிகத் திறனும், உள்ளூர் விமான சேவை அனுபவமும் இருந்தது. கங்க்வாலுக்கு உலகளாவிய விமான நிறுவன நிபுணத்துவம் இருந்தது. இதற்கு முன்பு அவர் யு.எஸ். ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் மூத்த பதவிகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இந்த இருவரின் கூட்டணியே, இந்தியப் பயணிகளுக்குப் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது; மலிவான கட்டணத்தில், எல்லா நேரமும் விமானங்களை இயக்கி, கட்டுப்பாட்டுடன் கூடிய விமான நிறுவன மேலாண்மைக்கு உலகளாவிய ஒரு பாடமாக மாறியது.

ஆனால், இந்த வெற்றிகரமான பயணத்தின் ஒரு கட்டத்தில், இரண்டு நிறுவனர் நண்பர்களுக்கு இடையேயான நம்பிக்கை குறைந்தது. இண்டிகோ நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises) மூலம் ராகுல் பாட்டியாவுக்கு இருந்த அதிகப்படியான அதிகாரம் குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினருடனான நிதிப் பரிவர்த்தனைகள் (Related-Party Transactions) குறித்தும், அத்துடன் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் (Board) சுதந்திரம் குறித்தும் கங்க்வால் கேள்வி எழுப்பத் தொடங்கினார்.

கங்க்வாலைப் பொறுத்தவரை, வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியமான கொள்கையாக இருந்தது. இண்டிகோ போன்ற மிகப் பெரிய, பொதுவில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில், நிறுவனரின் தனிப்பட்ட கட்டுப்பாடு என்பது, நிறுவன நிர்வாக நெறிமுறைகளை (Governance) விட முக்கியமானது அல்ல என்று அவர் உறுதியாக நம்பினார். இதன் காரணமாக, 2019ஆம் ஆண்டில், கங்க்வால் இந்த விவகாரங்கள் குறித்து இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) புகார் அளித்தார். பாட்டியா, கங்க்வால் மீது வழக்குத் தொடுக்க, கங்க்வாலும் பதிலுக்கு வழக்குத் தொடுக்க, இந்தச் சண்டை லண்டனில் சமரசத் தீர்ப்பாயம் வரை சென்றது.

இந்தச் சண்டையின் முக்கியப் பிரச்சினை, நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்பந்தத்தில் இருந்த வீட்டோ உரிமை ஆகும். இந்த உரிமைகள், இரண்டு நிறுவனர்களையுமே நிர்வாக ரீதியில் ஒரு முட்டுக்கட்டையில் நிறுத்தியதுடன், அவர்கள் பங்குகளை விற்கவும் கட்டுப்பாடுகளை விதித்தன. இறுதியில், 2021ஆம் ஆண்டு சமரசத் தீர்ப்புக்குப் பிறகு, இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் நீக்கப்பட்டன. இதன் மூலமாகத்தான், கங்க்வால் நிறுவனத்திலிருந்து சுதந்திரமாக வெளியேறுவதற்கான வழி பிறந்தது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், கங்க்வால் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக நிறுவனத்தை விட்டு முழுமையாக வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார். அதன்படியே, அவர் சந்தைக்கு எந்தப் பெரிய அதிர்ச்சியும் அளிக்காமல், அமைதியாகத் தன் பங்குகளை விற்கத் தொடங்கினார். அவருடைய இந்த வெளியேற்றத்திற்குக் காரணம் பணமில்லை. இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது லாபத்தில் கொடிகட்டித்தான் பறந்து கொண்டிருந்தது. எனினும், கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளே இந்த வெளியேற்றத்திற்கான முக்கியமான காரணமாக இருந்தது.

நிறுவனங்கள் வளரும்போது, அதன் நிர்வாகத் தரமும் மாற வேண்டும் என்று கங்க்வால் உறுதியாக நம்பினார். நிறுவனத்தின் கட்டுப்பாடு ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்திருப்பது, லாப நோக்கங்களில் இருக்கும் முரண்பாடுகள் மற்றும் நிர்வாகக் குழு சுதந்திரம் இல்லாதது போன்ற பிரச்சினைகளால் அவர் மிகவும் கசப்படைந்தார். எனவே, அந்த நிறுவனத்தில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதைவிட, தன் கொள்கையில் உறுதியாக இருந்து வெளியேறுவதே மேல் என்று அவர் முடிவு செய்தார்.

தற்போது கங்க்வால் வெளியேறிய பிறகு, இண்டிகோ ஒரு நிறுவனர்களால் இயக்கப்படும் அமைப்பிலிருந்து, நிறுவன முதலீட்டாளர்கள் அதிகப் பங்குகளை வைத்திருக்கும் ஒரு கட்டமைப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இது, நிறுவனத்தின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும், முதலீட்டாளர்கள் நம்பிக்கைக்கும் நல்லதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதே சமயம், இண்டிகோவின் செலவுக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் கலாச்சாரம் தொடர்ந்து வலுவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இண்டிகோ தனது அடுத்த பயணத்தைத் தொடரும்போது, அந்நியச் செலாவணி மாற்றங்கள் மற்றும் உலகளாவிய விரிவாக்கம் போன்ற சவால்களை எதிர்கொண்டாலும், நவீன இந்திய விமானத் துறையில் அதன் வளர்ச்சி மற்றும் நல்ல நிர்வாகம் இணைந்து செயல்படும் என்பதை நிரூபிக்க வேண்டியதுதான் இண்டிகோவின் மிக முக்கியச் சவாலாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com