

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தி கிரேட் ட்ரான்ஸ்ஷிப்மென்ட்: ரைஸ், ஸ்கோப் அந்த காஸ்ட்ஸ் - The Great Transshipment Scam: Rise, Scope, and Costs என்ற அறிக்கை புனே, குஜராத், சென்னை ஆகிய இந்திய தொழிற்சாலை மையங்களை, அமெரிக்காவின் சின்சினாட்டி, டேட்டன், கொலம்பஸ் நகரங்களுடன் ஒப்பிடப்பட்டு கூறியிருக்கும் கருத்து கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அந்த அறிக்கை இந்தியா நகரங்களை அதற்கு இணையான அமெரிக்க நகரங்களின் அசிங்கமான சகோதரி (ugly sister) என்கிறது.
ஒரே மாதிரியான பொருட்களைத் தயாரிக்கும் நகரங்களை வெள்ளை மாளிகை சகோதரி நகரங்கள் என அழைப்பது வழக்கம். The Great Transshipment Scam: Rise, Scope, and Costs அறிக்கை இவற்றை 'அசிங்கமான' எனக் கூறுவதற்கு காரணம் உள்ளது.
சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரி விதித்திருக்கிறது. இந்த வரி விதிப்பிலிருந்து தப்பிக்க சீன பொருட்கள் இந்திய நகரங்கள் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக அந்த நாட்டு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு தான் அந்த காரணம்.
இந்த அறிக்கையில் சீன பொருட்கள் வரி விதிப்பிலிருந்து தப்பிக்க எப்படி மற்ற நாடுகளின் வழியாக வருகின்றன என்பது ஆராயப்பட்டுள்ளது.
வரி குறைவான நாடுகளுக்கு அனுப்பப்படும் சீன பொருட்கள் அங்கு சொற்ப அளவிலான உருவாக்கம், மறு பேக்கேஜிங் அல்லது ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த நாட்டு பொருளாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவதாக இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.
இப்படி செய்வதன் மூலம் குறைவான வரியுடன் அந்த பொருட்கள் அமெரிக்க சந்தையில் நுழைக்கின்றன. இதை வர்த்தக வல்லுநர்கள் "டேரிஃப் ஆர்பிட்ரேஜ்" (tariff arbitrage) என்று அழைக்கிறார்கள்.
வர்த்தக ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த பரந்த மாற்றத்தை "பெரும் மறுஒதுக்கீடு" (Great Reallocation) என்றும், சீனா தொடர்புடைய பொருட்கள் நகரும் நாடுகளின் வலையமைப்பை "நிழல் ட்ரான்ஷிப்மென்ட் நெட்வொர்க்" (Shadow Transshipment Network) என்றும் இந்த அறிக்கை அழைக்கிறது.
கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து, நிழல் ட்ரான்ஷிப்மென்ட் நெட்வொர்க்கின் முதல் அடுக்கில் (Tier 1) இந்தியாவும் வைக்கப்பட்டுள்ளது.
Tier 1 நாடாக இந்தியா இடம்பெற்றிருப்பதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பரவலாக வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது என அர்த்தமில்லை.
மாறாக, பெருமளவில் நடக்கும் நேர்மையான வர்த்தகத்துக்கு உள்ளேயே சீன பொருட்களும் கலந்திருக்கின்றன என்ற கவலையை இந்த அறிக்கை எழுப்புகிறது.
ஏனென்றால் அப்படி மற்ற நாடுகளின் மூலமாக பொருட்கள் வருவது அமெரிக்காவுக்கு வரி வழியாக பில்லியன் கணக்கான டாலர்கள் வருவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2025-ம் ஆண்டு மெக்சிகோ, இந்தியா, வியட்நாம் வழியாக சுமார் 67 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன பொருட்கள் அமெரிக்காவுக்கு திசைமாற்றப்பட்டதாக அமெரிக்க வர்த்தகத் துறையின் ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளது.
முன்னதாக கூறியதைப் போல, ஒரே மாதிரியான பொருட்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு உற்பத்தி பகுதிகளை, அமெரிக்க தொழில்துறை பகுதிகளுடன் இந்த வெள்ளை மாளிகை அறிக்கை ஒப்பிடுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பம்புகள் மற்றும் காம்ப்ரசர்கள் உற்பத்தி தொடர்பாக, புனே, குஜராத், சென்னை ஆகிய இடங்களை இது குறிப்பிடுகிறது. இவற்றை அமெரிக்காவின் சின்சினாட்டி, டேட்டன், கொலம்பஸ் ஆகிய நகரங்களுடன் ஒப்பிடுகிறது.
இந்த இந்திய நகரங்கள் அமெரிக்காவின் வரி விதிகளை மீறியதாக அந்த அறிக்கை குற்றம்சாட்டவில்லை. ஆனால் இவை அமெரிக்க நகரங்களுடன் உற்பத்தி போட்டியில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஒருவேளை சீன பொருட்கள் இந்த நாடுகள் வழியாக அனுப்பப்பட்டால் அது சீன நிறுவனங்கள் அமெரிக்க உற்பத்தியாளர்களுடன் போட்டிபோடுவதாகும் என்கிறது வெள்ளை மாளிகை.
இந்த நடைமுறையால், அமெரிக்காவுக்கு பில்லியன் கணக்கான டாலர் வரி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்று நிர்வாகம் தெரிவிக்கிறது. அத்துடன், சுமார் 4.5 லட்சம் அமெரிக்க வேலைகள் பாதிக்கப்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தான் "அசிங்கமான சகோதரி நகரங்கள்" என்ற ஒப்பீடு விளக்க முயல்கிறது.
இவை பொருளாதார மதிப்பீடுகளே தவிர, உறுதிப்படுத்தப்பட்ட சட்டவிரோத ஏற்றுமதிகளின் எண்ணிக்கையோ, உண்மையான வேலை இழப்புகளோ அல்ல.
ஒரு பொருளின் சில பாகங்கள் சீனாவிலிருந்து பெறப்படுகின்றன என்பதற்காக, இந்தியாவில் தயாரிக்கப்படும் அந்த பொருள் சீனப் பொருளாகி விடாது.
ஒரு இந்திய நிறுவனம், சீன மோட்டார்கள், மின்னணுவியல் சாதனங்கள், எஃகு அல்லது பிற பாகங்களை இறக்குமதி செய்து, இறுதிப் பொருளை இந்தியாவில் தயாரித்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இந்தியாவில் உண்மையில் எவ்வளவு உற்பத்தி அல்லது உருவாக்கம் நடைபெறுகிறது என்பதே அமெரிக்காவின் அக்கறை.
கிட்டத்தட்ட தயாராகிவிட்ட ஒரு சீனப் பொருளை இறக்குமதி செய்து, சிறு மாற்றங்களை மட்டும் செய்துவிட்டு, அதை இந்திய பிறப்பிடம் என்று அறிவிப்பதற்கும், பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலேயே கணிசமான உற்பத்தியை மேற்கொள்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது.
அசெம்பிளிங், ஃபினிஷிங், டெஸ்டிங் போன்ற உற்பத்தி நடவடிக்கைகள் இந்தியாவில் நடைபெற்று, அந்த பொருட்கள் இந்தியாவுக்கான வரியுடன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவாதில் அமெரிக்காவுக்கு சிக்கல் இல்லை.
ஆனால் வேர்ஹவுசிங், மறு-லேபிளிங், மறு-இன்வாய்சிங் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி செய்யபட்டால் அது அமெரிக்க வரி வருவாய்யையும் சந்தையையும் பாதிக்கும் என்கிறது இந்த அறிக்கை.
இறுதியில் இங்கு எழும் கேள்வி இதுதான் - அந்தப் பொருள் உண்மையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா, அல்லது அமெரிக்காவை வந்தடைவதற்கு முன் வெறுமனே இந்தியா வழியாகக் கடத்தப்பட்டதா? அமெரிக்க சுங்கத் துறை மேலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கும்போது, இந்த வேறுபாடு முக்கியத்துவம் பெறும்.
சந்தேகத்திற்குரிய இறக்குமதிகளை கண்டறிய, அதிக தரவுகளையும் செயற்கை நுண்ணறிவையும் (AI) பயன்படுத்துமாறு அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையை வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
எனவே, "மேட் இன் இந்தியா" (Made in India) என்ற லேபிள் மட்டும், எல்லா கேள்விகளுக்குப் போதுமான பதிலாக இருக்காமல் போகலாம். பாகங்கள் எங்கிருந்து வந்தன, இந்தியாவில் உண்மையில் என்ன உருவாக்கம் நடந்தது, தான் அனுப்பியதாகக் கூறும் அளவை உற்பத்தி செய்யும் திறன் ஏற்றுமதியாளருக்கு உள்ளதா என்பதையெல்லாம் சுங்கத் துறை அதிகாரிகள் ஆராயக்கூடும்.
தற்போது சீனாவில் பொருட்களை தயாரித்து வரும் நிறுவனங்களை தனது பக்கம் ஈர்க்க இந்தியா முயற்சிக்கிறது. ஆனாலும், பல இந்தியத் தொழில்கள் இன்னும் சீன பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன.
ட்ரான்ஷிப்மென்ட் மீதான தன் நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தும்போது, இது இந்திய ஏற்றுமதியாளர்களை மேலும் கூர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாக்கக்கூடும். தங்கள் பாகங்கள் எங்கிருந்து வந்தன, இந்தியாவில் என்ன தயாரிக்கப்பட்டது, இறுதிப் பொருள் எப்படி இந்திய பிறப்பிடமாகத் தகுதி பெறுகிறது என்பதற்கான கூடுதல் விவரங்களை நிறுவனங்கள் அளிக்க வேண்டியிருக்கலாம்.
சீன பாகங்களைப் பயன்படுத்துவதால் ஒரு இந்தியப் பொருள் சீனப் பொருளாகிவிடும் என்பது இங்கு பிரச்சினை அல்ல.
இந்தியாவில் போதுமான அளவு உற்பத்தி உண்மையிலேயே நடைபெற்றதா - அல்லது சீனப் பொருட்கள் வெறுமனே இந்தியாவின் வழியாக லேபிள் மாற்றப்பட்டு, அமெரிக்காவை கடத்தப்படுகிறதா என்பதே இங்கு எழும் கேள்வி.
இதனாலேயே, வெள்ளை மாளிகையின் புனே-குஜராத்-சென்னை ஒப்பீடு, இந்தியாவின் உற்பத்தியாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்தியா உண்மையாகவே சீனாவுக்கு மாற்றான உற்பத்தி மையமாக மாறி வருகிறதா என்பதையும், அதே நேரத்தில், அது சீனப் பொருட்கள் அமெரிக்க சந்தைக்குள் நுழைவதற்கான ஒரு பாதையாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதையும் அமெரிக்கா உறுதி செய்ய முயற்சிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்