77வது சுதந்திர தினம்: "எனது தலைமையிலான அமைச்சகம் சிறப்பான பணிகளை செய்கிறது" பிரதமர் மோடி பேச்சு!!

77வது சுதந்திர தினம்: "எனது தலைமையிலான அமைச்சகம் சிறப்பான பணிகளை செய்கிறது" பிரதமர் மோடி பேச்சு!!

77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றி வைத்து, வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் இந்தியா தான் என சிறப்புரை ஆற்றியுள்ளார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தலைநகர் டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி. அதன் பின்னர், 21 குண்டுகள் முழங்க செங்கோட்டையில், மூவர்ண கோடியை ஏற்றினார் பிரதமர் மோடி. இதையடுத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, நாடு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அப்பொழுது பேசிய அவர், "கொரோனாவிற்கு பிறகு உலகத்தையே இந்தியா தான் வழிநடத்துகிறது. இந்த உலகம் நிலைத்தன்மையுடன் இயங்க இந்தியா தான் கரணம். இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவைப்படுகிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா முன்னேற வேண்டுமென உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நாம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும். தேசத்தை மிக வலுவுடன் கட்டமைக்கும் பணிகளில் தான் நமது கவனம் இருந்து வருகிறது. வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் புகுந்து நமது வளங்களை கொள்ளையடித்தனர். இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்து கொள்ளும் திறனை பெற்றுள்ளது. இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரும் நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று பேசியுள்ளார்.

மேலும், "2014,2019ல் வலுவான பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்த்திருத்தங்களை செய்ய தைரியம் பிறந்தது. சீர்த்திருத்தம், செயல்பாடு, மாற்றம் இதுவே நம் தாரகமந்திரம். நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். உங்களுக்காக நான் நல்ல மாற்றங்களை கொண்டு வருகிறேன். எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகமும் சிறப்பான பணிகளை செய்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், "நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் சூழ்நிலையை தடுக்கும் ஊழலை நீக்கியுள்ளோம். ஊழல் என்ற தடையை நீக்கி நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் 12.5 லட்சம் பேர் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் 3 வது இடத்தை பிடிக்கும். விரைவில் விஸ்வகர்மா யோஜனா தித்திட்டம் செயல்படுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் இந்தியா தான்" என்றும் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com