
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர், இன்று காலை, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு, ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
தேசம் தனது துணிச்சலான மகனை இழந்திருப்பதாகவும், தன்னலமற்ற அவரது சேவை விதிவிலக்கான வீரத்தால் குறிக்கப்பட்டது என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடி
பிபின் ராவத்தின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. என்றும் அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது என கூறினார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு எதிர்பாராத மிக மோசமான துயரம் என்றும் இந்த கடினமான சூழ்நிலையில், இந்தியா ஒன்றுபட்டு நிற்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மறைவு நாட்டுக்கும், ராணுவத்திற்கும் பேரிழப்பு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா
தாய் நாட்டிற்கு சேவையாற்றிய துணிச்சல் மிக்க வீரர்களில் ஒருவர் பிபின் ராவத், அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.