போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன்க் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளதாகவும், அதன் மூலம் ஈட்டப்பட்ட தொகையில் சொகுசு கார்கள் மற்றும் சொத்துக்களை வாங்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை ஜாபர் சாதிக் தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கு மட்டுமன்றி, இயக்குனர் அமீரின் வங்கு கணக்கு மற்றும் போலி நிறுவனங்களின் வங்கி கணக்கிலும் செலுத்தியதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும்,ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து விரிவான வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை மார்ச் இரண்டாவது வாரத்திற்கு நீதிபதி சுந்தர் மோகன் ஒத்திவைத்தார்.